ஸ்டெர்லைட் ஆலைக்கு மின்சாரம் வழங்குவது குறித்து அரசு முடிவு செய்யும்: ஆட்சியர் கருத்தால் அதிர்ச்சி!
ஸ்டெர்லைட் ஆலைக்கு மின்சாரம் வழங்குவது குறித்து அரசு முடிவு செய்யும் என ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறியுள்ளார்.
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு மின்சாரம் வழங்குவது குறித்து அரசு முடிவு செய்யும் என ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை மக்களின் கடும் எதிர்ப்பால் அண்மையில் மூடி சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலம் கசிவு இருப்பதாக தகவல்கள் வெளியானது.
இதனையடுத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி 5 பேர் கொண்ட குழுவை அமைத்து நேற்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வில் கந்தக அமிலம் கசிவு இருப்பது தெரியவந்தது.
அகற்றும் பணி தேக்கம்
இதனையடுத்து நேற்று காலை முதலே அந்த கந்தக அமிலத்தை ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து அகற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் ஆலையின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் அமிலத்தை அகற்றும் பணிகளில் தேக்கம் ஏற்பட்டுள்ளது.
அரசிடம் கோரிக்கை
இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலக்கசிவை தடுக்கபோதிய மின்சாரம் தேவை என்றும் குறைந்த அளவு தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்த அனுமதிக்கவும் வேதாந்தா நிறுவனம் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.
1000 மெட்ரிக் டன்
இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஸ்டெர்லைட் ஆலையில் 1000 மெட்ரிக் டன் கந்தக அமிலம் உள்ளது. ஆலையில் இருந்து அமிலத்தை அப்புறப்படுத்த மேலும் 2 நாட்கள் ஆகும்.
டேங்கர் லாரிகள் தயார்
கந்தக அமிலம் தேவைப்படும் மற்ற ஆலைகளுக்கு இவை அனுப்பிவைக்கப்படும். இந்த கந்தக அமிலகத்தை மற்ற ஆலைக்கு கொண்டு செல்ல 5 டேங்கர் லாரிகள் தயாராக உள்ளது.
அரசு முடிவு செய்யும்
மின்சாரம் கேட்டு ஸ்டெர்லைட் ஆலை அளித்த கோரிக்கை அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. மின்சாரம் வழங்குவது குறித்து அரசு முடிவு செய்யும். இவ்வாறு ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.