ஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை.. தூத்துக்குடி கலெக்டர் மீண்டும் உறுதி
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை மூட அனைத்து சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை அரசு உறுதியாக எடுக்கும் என்று, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
நிருபர்களிடம் இன்று மாலை பேசிய கலெக்டர் மேலும் கூறியது:
மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி இல்லாததால் ஏப். 9 முதல் ஆலை இயங்கவில்லை. ஸ்டெர்லைட் ஆலையை உற்பத்தி செய்யும் மின்சாரத்தையும் அவர்களால் பயன்படுத்த முடியாது.
தொழிற்சாலை பயன்பாட்டிற்காக வழங்கப்படும் தண்ணீரும் நிறுத்தப்பட்டுள்ளது. சட்டப்படி ஆலையை மூட தேவையான நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது.
ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு அனைத்து சட்டபூர்வமான நடவடிக்கைகளையும் தமிழக அரசு உரிய முறையில் உறுதியாக எடுக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இரு தினங்கள் முன்பும் சந்தீப் நந்தூரி ஆலையை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருந்தார்.
இதனிடையே, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி 29ஆம் தேதி வீரபாண்டியபட்டணத்தில் இருந்து திருச்செந்தூர் வரை பேரணியாக செல்ல மீனவர்கள் முடிவு செய்துள்ளனர். தூத்துக்குடியில் நடைபெற்ற மீனவர் கூட்டமைப்பில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.