நீட் மாணவர்களுக்கு கிரேஸ் மார்க் வழங்க வேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தல்
நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கோவை: தமிழில் நீட் எழுதிய மாணவர்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பகிரங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று கோவையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
வால்மார்ட் ஆபத்தானது
ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்டபோது மத்திய அரசு தரப்பில் சொன்னது எதுவும் நடக்கவில்லை. ஜி.எஸ்.டியால் சிறு, குறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 40 சதவீத தொழில்கள் மூலப்பொருட்கள் விலை உயர்வு, ஜி.எஸ்.டி போன்றவற்றால் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. நாடு முழுவதும் ஜி.எஸ்.டி பிரச்சினையில் சிக்கி இருக்கும் உற்பத்தியாளர்களின் கோரிக்கையினை மத்திய,மாநில அரசுகள் ஏற்க வேண்டும். வால்மார்ட் நிறுவனம் சந்தையில் நுழைந்து இருப்பது ஆபத்தானது, இதை எதிர்க்க வேண்டும்.
போராட்டத்திற்கு ஆதரவு
திருப்பூரில் 26 ஆயிரம் கோடியாக இருந்த பனியன் ஏற்றுமதி 23 ஆயிரம் கோடியாக குறைந்துள்ளது. 3000 கோடி வரை ஏற்றுமதி குறைந்துள்ளது.கோவை, திருப்பூர் மாவட்டங்களில் நிலவும் தொழில் பிரச்சினையை மத்திய, மாநில அரசுகள் சரியாக கையாளவில்லை. தொழில் அமைப்புகள் நடத்தும் போராட்டத்திற்கு தங்கள் கட்சி ஆதரவளிக்கும்.
கிரேஸ் மார்க் வேண்டும்
மேலும் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்யவில்லை. தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு பெரும் அநீதி ஏற்பட்டுள்ளது. கேள்வித்தாளில் மொழியாக்கம் தவறாக கொடுக்கப்பட்டுள்ளது. 68 கேள்விகள் பிழையாக கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இதை சரியாக புரிந்து மாணவர்கள் தேர்வு எழுதி இருக்க முடியாது. தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மத்திய கல்வி வாரியம் "கிரேஸ்" மார்க் வழங்க வேண்டும்.
பாஜக எதிர்ப்பே முதன்மையானது
துணைவேந்தர் நியமனம், நிர்மலா தேவி விவகாரம் உள்ளிட்டவற்றில் தெளிவான சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மதுரையில் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம். நடிகர் எஸ்வி சேகர் முன் ஜாமீன் மனுவை நீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையிலும்,அவரை கைது செய்யாமல் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவரை கைது செய்யாமல் இருப்பது மாநில அரசு அதை விருப்பவில்லை என்பதையே காட்டுகின்றது. சிபிஎம் கட்சியை பொறுத்தவரை பா.ஜ.க எதிர்ப்பு முதன்மையானது. அகில இந்திய அளவில் மாநிலத்திற்கு ஏற்றவாறு கூட்டணிகள் அமைக்கப்படும். பாலகங்காதார திலகர் பயங்கரவாதி என்று ராஜஸ்தான் மாநில பாடபுத்தகத்தில் சொல்லப்பட்டு இருப்பது தவறான தகவல்.
இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.