வேலூர் அருகே பயங்கரம்.. நாட்டுத் துப்பாக்கி வெடித்து.. சிறுவன் உடலில் 8 குண்டுகள் பாய்ந்தது!
நாட்டு துப்பாக்கி தவறுதலாக வெடித்து மாணவன் படுகாயம் அடைந்துள்ளான்.
Recommended Video
வேலூர்: வேலூர் மாவட்டம் ஆலங்காயம் அருகே நாட்டு துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் பள்ளி மாணவன் படுகாயமடைந்தான். 8 குண்டுகள் பாய்ந்த நிலையில் மாணவனுக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆலங்காயம் அருகே கல்லுரபட்டி கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவரது மகன் 9 வயது ராகவன். இன்று இவரது வீட்டு பரண் மீதிலிருந்து கள்ள துப்பாக்கி ஒன்று திடீரென்று கீழே விழுந்ததாகவும், அப்போது எதிர்பாராதவிதமாக அந்த துப்பாக்கி வெடித்ததாகவும் கூறப்படுகிறது.
இதில் துப்பாக்கி குண்டுகள் ராகவன் கால்களில் பாய்ந்ததில் சிறுவன் பலத்த காயமடைந்துள்ளதாக கூறி, உயிருக்கு போராடிய அவனை பெற்றோர் உடனடியாக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு ராகவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
8 பால்ரஸ் குண்டுகளில் 4 குண்டுகள் நீக்கப்பட்டுவிட்டதாகவும், மீதமுள்ள 4 குண்டுகள் அறுவை சிகிச்சை செய்து எடுக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறுவன் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது குறித்து ஆலங்காயம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டிற்குள் நாட்டு துப்பாக்கி எப்படி வந்தது? தவறுதலாக கீழே விழுந்தாலும் அதனை யார் வெடிக்க செய்தது என்பன குறித்து உண்மை நிலவரத்தை அறிய விசாரணையை கையிலெடுத்துள்ளனர்.