பொட்டு சுரேஷ் கொலைவழக்கு: அட்டாக் பாண்டியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
மதுரை: பொட்டுசுரேஷ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் அட்டாக்பாண்டி தாக்கல் செய்த முன் ஜாமீன்மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
மதுரையை சேர்ந்தவர் சுரேஷ்பாபு என்ற ‘பொட்டு‘ சுரேஷ். தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பினராக இருந்து வந்தார். மு.க.அழகிரியின் நெருங்கிய நண்பரான அவர், கடந்த 31.1.2013 அன்று மதுரை ஜெய்ந்த்புரம் பகுதியில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து சுப்பிரமணியபுரம் போலீசார் 18 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
அவர்களில், பலர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். மேலும், சிலரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த பாண்டி என்ற ‘அட்டாக்‘ பாண்டியை (வயது 36) போலீசார் தேடி வந்தனர். போலீசாரால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து அவரை தேடப்படும் குற்றவாளியாக போலீசார் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் ‘அட்டாக்‘ பாண்டி முன்ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே 3 முறை அட்டாக் பாண்டி முன்ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுக்கள் திரும்ப பெறப்பட்டதால் அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
நான்காவது முறையாக
இந்த நிலையில் நான்காவது முறையாக முன்ஜாமீன்கோரி மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், இவ்வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைந்த சபாரத் தினம் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் என்னை வழக்கில் சேர்த்துள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள், தற் போது ஜாமீனில் வெளிவந்துவிட்ட னர். வழக்கில் குற்றப்பத்திரிகை யும் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. எனவே, எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்' எனக் கூறப்பட்டிருந்தது.
போலீஸ் எதிர்ப்பு
இந்த மனு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன் கடந்த 17ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது சுப்பிரமணியபுரம் ஆய்வாளர் கோட்டைச்சாமி பதில் மனு தாக்கல் செய்தார். அதில், பொட்டு சுரேஷ் கொலையில் அட்டாக் பாண்டி மூளையாகச் செயல்பட்டுள்ளார். கொலையை நேரில் பார்த்தவர்களும், கொலைக்கும் அட்டாக் பாண்டிக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
தேடப்படும் குற்றவாளி
பல வழக்குகளில் அட்டாக் பாண்டி ஏற்கெனவே முன்ஜாமீன் பெற்றுள்ளார். அப்போது நீதிமன்ற நிபந்தனைகளை அவர் மதிக்கவில்லை. அவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார். அவரை தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றமும் அறிவித்துள்ளது. அவரது சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே 3 முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இந்தத் தகவல்களை அவர் மறைத்துள்ளார். அவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது, எனக் கூறப்பட்டிருந்தது.
மனு தள்ளுபடி
இந்த மனு மீதான விசாரணை கடந்த சில தினங்களாக நடைபெற்றது. நீதிபதி பி.என்.பிரகாஷ் மனுவை விசாரித்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார். இன்று அட்டாக் பாண்டியின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து அவர் உத்தரவிட்டார்.