ஓய்வில்லாத வேலையால் பழவேற்காடு தலைமை காவலர் மாரடைப்பில் மரணம்- சக காவலர்கள் அதிர்ச்சி
பணியின்போது மாரடைப்பு ஏற்பட்டு பழவேற்காடு காவல்நிலைய தலைமை காவலர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவள்ளூர்: பழவேற்காட்டில் பணியின்போது மாரடைப்பு ஏற்பட்ட நிலைய தலைமை காவலர் கோபி மரணத்திற்கு காரணம் பணிச்சுமையே என சக காவலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
திருவாலங்காட்டில் வசித்து வந்தவர் கோபி 50, இவர் மப்பேடு காவல்நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் பழவேற்காடு கடற்கரை பகுதியில் நடைபெற்றுவரும் தீவிரவாத ஊடுருவல் தடுப்பு நடவடிக்கை ஒத்திகை நிகழ்ச்சி பாதுகாப்பு பணிக்காக நேற்றுமுன்தினம் தலைமை காவலர் கோபி ஈடுபட்டிருந்தார்.
அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த சக காவலர்கள் கோபியை சிகிச்சைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி தலைமை காவலர் கோபி பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து அவர் ஓய்வு இல்லாமல் பணியில் ஈடுபட்டு வந்ததால் நான்கு தினங்களுக்கு முன்பு தனக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளதால் விடுப்பு வழங்க வேண்டுமென உயரதிகாரிகளிடம் கோபி கோரியிருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பழவேற்காடு பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதின் காரணமாகவே உடல்நலம் மேலும் மோசமடைந்து கோபி உயிரிழந்தது விட்டதாக சககாவலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இருபத்துநான்கு மணிநேரமும் ஓய்வின்றி காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருவதால் அவர்களுக்கு மனஉளைச்சல் ஏற்படுவதாக கூறிய அவர்கள் சிலர் உடல்நல குறைவு காரணமாகவும் தற்கொலை செய்துகொண்டு உயிரிழக்கும் நிலை தொடர்வதாக தெரிவித்தனர்.
எனவே தமிழக அரசு காவல் நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்புவதோடு காவலர்களுக்கு போதிய ஓய்வும் மனஅழுத்தத்தை குறைக்க அவர்களுக்கு கவுன்சலிங் அளிக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அத்துடன் உயிரிழந்த தலைமை காவலரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்குவதோடு குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணியும் வழங்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்