வண்டலூர் பூங்காவில் 10,000 மரங்கள் சேதம்... விலங்குகள் உயிர் தப்பியதா?
புயலால் கரையைக் கடக்கும் போது வீசிய பலத்த காற்றால் வண்டலூர் உயிரியில் பூங்க பலத்த சேதம் அடைந்துள்ளது.
காஞ்சிபுரம்: வர்தா புயலின் காரணமாக வீசிய பலத்த காற்றால் வண்டலூர் உயிரியல் பூங்காவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. 950 மீட்டர் நீளத்திற்கு பூங்காவின் வெளிப்புறப் பாதுகாப்புச் சுற்றுச் சுவர் விழுந்து விட்டது. விலங்குகள் நீர் அருந்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட தொட்டிகளும் இடிந்து விழுந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வண்டலுார் பூங்காவில் 1,900 ஏக்கர் பரப்பில் 85 அமைப்பிடங்களில் 2,000க்கும் அதிகமான விலங்குகள் உள்ளன. புலி, சிங்கம், சிறுத்தை, கரடி, கழுதைப்புலி, யானை உள்ளிட்ட 34 வகையான பாலுாட்டிகள்; ராஜநாகம், நாகம், முதலை, மலைப்பாம்பு உள்ளிட்ட ஊர்வன வகை விலங்குகள்; 20க்கும் மேற்பட்ட பறவை வகைகள் உள்ளன.
இந்த நிலையில் சென்னையை தாக்கிய வர்தா புயல் வண்டலூர் பூங்காவையும் மிஞ்சம் இல்லாமல் சேதப்படுத்தி சென்றுள்ளது. திங்கட்கிழமை மதியம் புயல் கரையைக் கடக்கும் போது வீசிய பலத்த காற்றால் வண்டலூர் உயிரியல் பூங்காவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. 950 மீட்டர் நீளத்திற்கு பூங்காவின் வெளிப்புறப் பாதுகாப்புச் சுற்றுச் சுவர் விழுந்து விட்டது. விலங்குகள் நீர் அருந்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட தொட்டிகள் இடிந்து விழுந்துள்ளது.
விலங்குகளின் இருப்பிட நிழற்கூரைகள், பார்வையாளர் ஓய்விடங்கள், இருக்கைகள் போன்றவை சேதமடைந்துள்ளன. குடிநீர்க் குழாய்கள், இணைப்புக் குழாய்கள் மின் கம்பங்கள், மின் கம்பிகள், மின் விநியோக அறைகள், இணைப்புச் சாலைகள், குடியிருப்புக் கட்டிடங்கள், அலுவலகக் கட்டிடங்கள் ஆகியவையும் சேதமடைந்துள்ளன. இருப்பினும் விலங்குகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.
புயல் முன்னெச்சரிக்கையால் அனைத்து விலங்குகளையும் பாதுகாப்பாக கூண்டில் அடைத்துவிட்டதால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்கப்பட்டதாக பூங்கா பராமரிப்பாளர்கள் கூறுகின்றனர். இருப்பினும் விலங்குகளுக்கு உணவுப் பொருட்களை கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. பூங்காவை சரிசெய்ய இன்னும் 3 மாதங்கள் வரை ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்று வீசியபோது விலங்கினங்கள் மிரண்டு போயுள்ளதாகவும் அவற்றிற்கு உளவியல் ரீதியிலான சிசிக்சை அளிக்க வேண்டும் என விலங்கு நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.