பொட்டு சுரேஷ் கொலை வழக்கு: அட்டாக் பாண்டி ஜாமீன் மனு தள்ளுபடி
மதுரை: திமுக பிரமுகர் பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அட்டாக் பாண்டி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது
மதுரை, அழகப்பன் நகரைச் சேர்ந்தவர் 'பொட்டு' சுரேஷ், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினராக இருந்தார்; மத்திய அமைச்சராகவும், திமுக தென் மண்டல அமைப்புச் செயலராகவும் இருந்த மு.க. அழகிரிக்கு நெருக்கமாக இருந்தார். இவரை கடந்த 2013 ஜனவரி 31-ஆம் தேதி டி.வி.எஸ். நகரில் மர்மக் கும்பல் ஒன்று வெட்டிக் கொலை செய்தது.
இதுகுறித்து சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப் பதிந்து, திமுக பிரமுகரும், அழகிரியின் மற்றொரு தீவிர ஆதரவாளருமான 'அட்டாக்' பாண்டி உள்ளிட்ட 14 பேரைத் தேடினர். இவர்களில் 7 பேர் வெவ்வேறு நீதிமன்றங்களில் சரணடைந்தனர். மேலும் 6 பேரை போலீசார் கைது செய்தனர். முதல் குற்றவாளியாக கருதப்பட்ட அட்டாக் பாண்டி மட்டும் தலைமறைவானார்.
அட்டாக் பாண்டி பிடிபட்டால் திமுக முக்கியப் பிரமுகர்கள் இந்த வழக்கில் சிக்குவார்கள் என்று கூறப்பட்டது. இந்த வழக்கில் 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அட்டாக் பாண்டி 2015 செப்டம்பரில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அட்டாக் பாண்டி மனு தாக்கல் செய்திருந்தார். அதில், கொலைச் சம்பவம் நடந்த இடத்தில் நான் இல்லை. ஏற்கெனவே கைது செய்யப்பட்டவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் போலீஸ் என்னை வழக்கில் சேர்த்துள்ளனர்.
இந்த கொலை வழக்கில் எனக்குத் தொடர்பு உள்ளதாக கூறுவதில் முகாந்திரம் இல்லை. 275 நாள்களுக்கு மேலாக சிறையில் இருப்பதால் எனது உடல்நிலை மோசமடைந்து வருகிறது. நீதிமன்றத்தின் எவ்வித நிபந்தனைகளுக்கும் உட்பட தயாராக உள்ளேன் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி வி.எம்.வேலுமணி, அட்டாக்பாண்டியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
அட்டாக் பாண்டிக்கும், பொட்டு சுரேஷுக்கும் கட்சிக்குள் மோதல் இருந்தது. கடந்த 2011இல் பொட்டு சுரேஷ் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட வழக்கில் அட்டாக் பாண்டியை போலீஸார் தேடினர். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. பொட்டு சுரேஷ் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.