மதுரை சிறையில் கைதி இறந்த விவகாரம்: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு
மதுரை: மதுரை மத்திய சிறையில் கைதி இறந்த விவகாரம் தொடர்பாக, தமிழக உள்துறைச் செயலர், சிறைத் துறை ஏடிஜிபி உள்ளிட்டோர் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நேற்று உத்தரவிட்டது.
மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதி பாலமுருகன் சிறைக்குள் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தார். இதையடுத்து அவரது மனைவி திருக்கம்மாள் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில், என்னுடைய கணவர் செந்தில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
கடந்த 24-ஆம் தேதி நள்ளிரவில் எனது உறவினருக்கு போலீஸாரிடம் இருந்து வந்த தொலைபேசி அழைப்பில், எனது கணவர் உடல்நலக் குறைவுடன் இருப்பதாகவும் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து மீண்டும் அழைத்த போலீஸார் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் எனது கணவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். என் கணவரை போலீஸாரே கொலை செய்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே, இதுதொடர்பாக நீதிபதி அல்லது சுதந்திரமான விசாரணை அமைப்பு விசாரிக்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதி வி.எஸ்.ரவி முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, தமிழக அரசின் உள்துறைச் செயலர், சிறைத் துறை ஏடிஜிபி உள்ளிட்டோர் சிறையில் இறந்த கைதி தொடர்பான வழக்கு ஆவணங்கள், அவரது பிரேத பரிசோதனை அறிக்கை உள்ளிட்டவற்றை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, மனு மீதான விசாரணையை வருகிற 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.