அவினாசி- அத்திக்கடவு திட்டத்துக்கு தமிழக அரசு ஒப்புதல்.. 60 ஆண்டு கால போராட்ட வரலாறு!
கோவை: தண்ணீர் தண்ணீர் படத்தையும், அத்திப்பட்டி கிராமத்தையும் யாரும் மறந்திருக்க முடியாது. வறட்சி என்றால் அப்படி ஒரு வறட்சி.. உண்மையில் அவினாசியின் நிலையும் அதுதான். இந்தத் துயரைத் தீர்க்கத்தான் அவினாசி - அத்திக்கடவு திட்டத்திற்காக கடந்த 60 வருடமாக அப்பகுதி மக்கள் போராடிக் கொண்டுள்ளனர்.
தற்போதுதான் அந்தத் திட்டத்திற்கு தமிழக அரசு இன்றைக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக மாநில பொதுப்பணித்துறை மற்றும் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். இது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செழுமையான கொங்கு மண்டலத்தில் வறட்சியில் சிக்கி உழலும் மோசமான பகுதி அவினாசி. இந்த நிலையை மாற்றத்தான் அப்பகுதி மக்கள் போராடி வருகிறார்கள். இந்த அவலத்தை மாற்ற முன்வைக்கப்பட்டதே அவினாசி -அத்திக்கடவு திட்டம். இதை பாசனத் திட்டமாக மட்டுமல்லால் அப்பகுதியில் உள்ள நீர்நிலைகளை நிறைத்து நிலத்தடி நீரையும் உயர்த்தும் வகையில் அமல்படுத்த வேண்டும் என்று மக்கள் கோரி வருகின்றனர்.
பவானி ஆற்றின் மேலே
பவானி ஆற்றின் மேற்பகுதியில் உள்ள கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்கள் நீண்ட நாட்களாக தங்கள் பகுதிக்கு நீர் ஆதாரத்தை பெருக்கும் வகையில் ஒரு திட்டம் செயல் படுத்தப்பட வேண்டும் என கோரி வந்துள்ளனர்.
பில்லூர் அணையிலிருந்து
இம்மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற பவானி ஆற்றின் மேற்புறத்தில் மின்சார உற்பத்திக்காக கட்டப்பட்ட பில்லூர் அணையிலிருந்து அத்திக்கடவு என்ற இடத்தில் ஒரு வெள்ளக் கால்வாய் அமைத்து அவினாசி பகுதி மக்கள் பயன் பெறும் வகையில் ஒரு திட்டம் "அத்திக்கடவு - அவினாசி திட்டம்" என பெயரிடப்பட்டு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் இத்திட்டம் கைவிடப்பட்டது. அதன்பின்னர் பல்வேறு கருத்துருக்கள் ஆய்வு செய்யப்பட்டு கைவிடப்பட்டன.
பேராசிரியர் மோகனகிருஷ்ணன் குழு
பேராசிரியர் மோகனகிருஷ்ணன் அவர்களின் தலைமையில் தொழில்நுட்ப வல்லுநர் குழு அத்திக்கடவு - அவினாசி வெள்ளக் கால்வாய் திட்டத்தினை ஆய்வு செய்து பவானி ஆற்றில் உபரிநீர் ஏற்படும் காலங்களில் 2 டி.எம்.சி நீரினை வெள்ளக்கால்வாய் மூலம் திருப்ப சாத்தியக்கூறு உள்ளது எனவும், பவானிசாகர் அணை நிரம்பி, உபரி நீர் வெளியேறும் பட்சத்தில், உபரிநீரை பில்லூர் அணையின் நீர்ப்பரப்பு பகுதியில் இருந்து வெள்ளக்கால்வாய் வழியாக திருப்பிவிடலாம் எனவும், இது தொடர்பாக விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, மதிப்பீடு தயாரிக்கப்பட வேண்டும் எனவும் பரிந்துரை செய்தது.
ரூ. 1862 கோடியில் திட்ட மதிப்பீடு
அதன்படி, விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அத்திக்கடவு - அவினாசி வெள்ள நீர் கால்வாய் திட்டத்திற்கான திட்ட அறிக்கை 2011-12 ஆம் ஆண்டு விலை விகிதப்படி ரூ.1862.00 கோடிக்கு தயாரிக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் பவானி ஆற்றில் வெள்ளக் காலங்களில் வரும் உபரி நீரை காரமடை, அன்னூர், அவினாசி, புளியம்பட்டி, பல்லடம் மற்றும் பெருந்துறை பகுதிகளில் உள்ள 71 ஏரிகளுக்கும் 538 குளங்களுக்கும் திருப்பிவிட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை செயலாக்க 1694.776 ஏக்கர் பட்டா நிலமும் 28.00 ஏக்கர் பாதுகாக்கப்பட்ட வனநிலமும் கையகப்படுத்தப்பட வேண்டும்.
7 தொகுதிகளில் அடங்கியது
காரமடை, மேட்டுப்பாளையம், அன்னூர், திருப்பூர், அவினாசி, சேவூர், குன்னத்தூர், பெருந்துறை, காங்கயம், ஊத்துகுளி, நம்பியூர், புளியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளை அடங்கிய 7 சட்டசபைத் தொகுதிகளைச் சார்ந்த 35 லட்சம் மக்களுக்கு இந்தத் திட்டத்தால் பயன் கிடைக்கும்.
பவானி சாகர் அணையின் உபரி நீர்
பவானி ஆற்றிலிருந்து ஆண்டுக்கு 53 டிஎம்சி தண்ணீர் உபரி நீராக கடலில் சென்று கலக்கிறது. இந்த தண்ணீரை அவினாசி உட்பட 2000க்கும் மேற்பட்ட கிராமங்களை சார்ந்த மொத்தம் 85 பெரிய குளங்களும் 225-க்கு மேற்பட்ட குட்டைகளும் நிரப்ப முடியும். இதற்கு தேவையான நீரின் அளவு 1.25 டிஎம்சி மட்டுமே.
3 மாவட்ட மக்கள்
இத்திட்டத்தின் மூலம் மூன்று மாவட்டங்களை சார்ந்த 1.30 லட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். ஆண்டுக்கு ஒருமுறை நிரப்பப்படும் தண்ணீரால் 5 ஆண்டுகளுக்கு குடிநீர் பிரச்சனை வராது. 25 லட்சத்திற்கு மேற்பட்ட பொது மக்களுக்கு தேவையான குடிநீர் கிடைக்கும். மின் பற்றாகுறைக் காலத்தில் இது ஒரு மின் சேமிப்பு திட்டமாக உள்ளது. சுமார் 35 லட்சத்திற்கு மேற்பட்ட விவசாய பகுதிகளில் நீர் எடுப்பதற்கு பயன்படும் மின் மோட்டார்களின் பயன்பாடு குறையும்.
மாரப்ப கவுண்டர் வைத்த கோரிக்கை
இந்தத் திட்டம் தொடர்பாக முதல் முறையாக கோரிக்கை வைத்தவர் அப்போதைய அவினாசி சட்டசபை உறுப்பினர் மாரப்ப கவுண்டர். பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக இருந்த சமயத்தில், 1963ம் ஆண்டு இதுதொடர்பான கோரிக்கையை மாரப்ப கவுண்டர், காமராஜரை நேரில் சந்தித்து வைத்தார்.
கிடப்பில் போட்ட பக்தவச்சலம்
இந்தத் திட்டத்தை காமராஜர் பரிசீலித்து வந்த நிலையில் அவர் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டு டெல்லிக்குப் போய் விட்டார். தற்காலிக அடுத்து முதல்வராக வந்தார் பக்தவச்சலம். இவர் 1967 வரை இத்திட்டத்தைப் பற்றி கண்டு கொள்ளாமல் கிடப்பில் போட்டு விட்டார். 1967ல் காங்கிரஸ் ஆட்சியைப் பறி கொடுத்தது.
திமுகவும் கண்டுகொள்ளவில்லை
பின்னர் அண்ணா முதல்வராக இருந்த சமயத்திலும் இக் கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. ஆனால் அண்ணா மரணமடைந்து விட்டார். அடுத்து வந்த கருணாநிதியும் இந்தத் திட்டத்தை கண்டு கொள்ளவில்லை.
நிலத்தடி நீரே இல்லை
அவினாசிக்கு வடக்கே உள்ள புளியம்பட்டி, நம்பியூருக்கு தெற்கேயும், அவினாசிக்கு தெற்கில் உள்ள நொய்யலும், கிழக்கில் உள்ள பெருந்துறை அருகிலும் பாசன வசதியுள்ள பகுதிகளாகும். ஆனால், அவினாசி வட்டாரத்தில் 60 ஆண்டுகளாக கடும் வறட்சி, மழையின்மை, பாசன வசதியின்மை என்று இருந்தபோதிலும் 1,300 அடிக்கும் கீழே ஆழ்துளை கிணறு அமைத்து கடும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர் விவசாயிகள்.
தமிழக அரசு ஒப்புதல்
இந்த நிலையில் அத்திக்கடவு நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்திற்கு மாநில அரசு நிர்வாக ரீதியிலான ஒப்புதல் வழங்கியுள்ளது. ஆலோசனை நிறுவனம் ஒன்றை உருவாக்கி, மத்திய அரசின் ஒப்புதல் பெற நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆலோசனை நிறுவனம் மூலம் ஆவணங்கள் தயாரிப்பு மற்றும் நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளுக்காக ரூ. 3.27 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டசபையில் இன்று தெரிவித்தார்.
போராட்டக் குழு மகிழ்ச்சி - நன்றி
தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு இந்தத் திட்டத்திற்காக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வரும் போராட்டக்குழுவினர் நன்றி தெரிவித்துள்ளனர். இருப்பினும் இதற்கான முறையான மற்றும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரும்வரை, தங்களது போராட்டம் தொடரும் என்றும் போராட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.