ஆங்கிலேயரின் அடிமை விலங்கை உடைத்தெறிந்த குற்றாலம்!
செங்கோட்டை: பசுமையான மலைத்தொடரும்,அடர்ந்த வனங்களும், மூலிகைப் புதர்களும், அரிய வன விலங்குகளும், பறவைகளும் நிறைந்த அற்புத பூமி குற்றாலம்.
அகத்தியர் கால் பதித்த திருத்தலம். தென்னாட்டின் மூலிகைக் குளியலறை அல்லது தென்னகத்து ஸ்பா என்று பெருமையோடு அழைக்கப்படும் இந்த குற்றாலம் ஏழைகளும் அனுபவிக்கும் இயற்கை அன்னையின் சீதனம்.
குற்றாலத்தின் குளுமையை அனுபவிக்கவே ஆண்டுதோறும் 30 லட்சம் சுற்றுலாப் பயணிகள் இந்நகருக்கு வந்து செல்கின்றனர். நேற்று குற்றால நகரில் உள்ள அருவிகளையும், புகழ்மிக்க ஆலயத்தையும் தெரிந்து கொண்டோம். இன்றைக்கு குற்றாலத்தின் மற்றொரு சிறப்பினை தெரிந்து கொள்வோம்.
பாண்டிய மன்னர்களுக்கு பெருமை சேர்த்த 14 நகரங்களுள் ஒன்று குற்றாலம். அம்மன்னர்கள் தம் பெயரோடு இணைத்து கொண்ட நகர்கள் ஐந்து. அவற்றுள் ஒன்று பொதிகை.
கயிலாயத்திற்கு இணையான மலை
குற்றால மலையின் உச்சியில் மூன்று சிகரங்கள் உள்ளதால் இம்மலைக்கு திரிகூட மலை என்றும் பெயர் உண்டு. இம்மலை கயிலாயத்திற்கு இணையானது என்றும் கூறுவர். இம்மலையின் பெருமையை "திங்கள் முடிசூடுமலை, தென்றல் விளையாடும் மலை' என மீனாட்சியம்மைக்குறம் போற்றுகின்றது.
பசுமையான மலைகள்
இம்மலை கடல் மட்டத்திற்கு மேல் 550 அடி உயரத்தில் உள்ளது. இம்மலையில் அதிக உயரமுள்ள சிகரம் "பஞ்சந்தாங்கி' என்று அழைக்கப்படுகிறது. இதன் உயரம் 5135 அடி. இச்சிகரம் நாட்டின் பிற பாகங்கள் மிக்கடுமையான பஞ்சத்தால் வாடிய காலத்திலும், இவ்விடங்கள் மழைக்கு காரணமாயிருந்து துன்பம் வராமல் தடுத்து மக்களை தாங்குவதால் பஞ்சந்தாங்கி என காரணப்பெயர் பெற்றது.
சிறப்பு வாய்ந்த மரங்கள்
திரிகூடமலையில் குருந்தமரம், மூங்கில், பலா, மா, கடம்ப மரம், கொன்றை, மருது, தேக்கு ஆகிய மரத்தாவரங்களை காணலாம். இதனை திருக்குற்றாலக்கோவையும் குறிப்பிடுகின்றது.
குற்றாலக் குறவஞ்சி
"வானரங்கள் கனிகொடுத்து மந்தியுடன் கொஞ்சும் மந்திசிந்தும் கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்" என்று குற்றால குறவஞ்சியில் திரிகூடராசப்பக்கவிராயர் இப்படி குற்றாலத்தின் வனங்களில் உள்ள அரியவகை பழங்களையும்,வாழும் வானரகங்களையும் இணைத்து சொல்கிறார்.
குற்றாலநாதனுக்கு அபிஷேகம்
இயற்கை அன்னைக் கொடுத்த அரிய,அழகிய வரப்பிரசாதமாக குற்றாலம் விளங்குகிறது.ஆனால் குற்றால அருவியில் குற்றாலநாதனுக்கு அருவியில் தண்ணீர் எடுத்து அபிஷேகம் செய்யவும்,வழிபாடு நடத்தவும் வழக்குப் போட்டுத்தான் வெற்றி பெற்ற வரலாறும்,நம்மை ஆண்டு அடிமை படுத்திய ஆங்கிலேயன் இங்கு ஆடிய ஆட்டம் அப்பப்பா சொல்லிமாளது.
ஆங்கிலேயருக்கு உரிமை
குற்றால அருவியில் ஆங்கிலேயர்கள் மட்டுமே குளிக்க வேண்டும் என்ற சட்டமே இருந்தது. அவர்கள் குளிக்கும் சமயத்தில் யாரும் அருவிக்கரை அருகே செல்லக் கூடாது.
வழக்கு தொடுத்த மக்கள்
குற்றால நாதனுக்கே அபிஷேகம் செய்யவும்,பூஜைகள் நடத்தவும் அவர்களிடம் அனுமதிபெறவேண்டிய அவல நிலையை கண்டு கொதித்த ஆலய நிர்வாகத்தினர் குற்றால அருவியில் அனைவரும்நீராடவும்,ஆலய பூஜைக்கு அவர்களால் இடையூரு ஏற்படக் கூடாது என்றுக் கோரியும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.
அனைவரும் குளிக்க அனுமதி
பல ஆண்டுகள் பல நீதிமன்றங்களில் வழக்கு நடைபெற்றது. 1917 ஆம் ஆண்டு முதல் யார்வேண்டுமானாலும் குளிக்கலாம்,ஆனால் குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டும் குளிக்க அனுமதியில்லை என்று தீர்ப்பளித்தனர்.
அருவியிலும் தீண்டாமை
இந்தியாவில் சுதந்திர போராட்டம் தீவிரமாக நடக்க ஆரம்பித்தது.
குற்றால அருவியில் ஆதிதிராவிடர்கள் மட்டும் குளிக்க அனுமதி இல்லாமல் இருந்தது. இந்த தகவல் சுதந்திரத்திற்காக போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்த மகாத்மா காந்தியின் காதுக்கு எட்டியது.
அருவியில் குளிக்காமல் போன மகாத்மா
தகவலைக்கேட்டு கொதிப்படைந்த அவர் குற்றாலம் வருவதற்கான சூழலை எதிர்ப்பார்த்து காத்திருந்தார் அந்நாளும் வந்தது. 24.01.1934 ல் அவர் குற்றாலம் வந்தார்.காந்தி குற்றாலம் வருகிறார் என்ற தகவலை அறிந்த ஆங்கிலேயர்கள் அவருக்கு குளிக்க தடையேதும் விதிக்கவில்லை. ஆனால் குற்றாலம் வந்த மகாத்மா அருவிக்கரைக்கு சென்று அருவியை பார்வையிட்டு குளிக்காமல் திரும்பினார்.
நீங்கிய தடை
1938ல் இராஜாஜி சென்னை மாகாண பிரதமாராக வந்தார்.அதன் பின்புதான் ஆதிதிராவிடர்கள் குளிக்க கூடாது என்றிருந்த தடையை நீக்கினார்.அதன் பின்புதான் அனைவரும் சாதி,மத பேதமின்றி அருவியில் குளிக்கத்தொடங்கினர்.
பெண்கள் குளிக்க அனுமதி
இப்படி அனைவரையும் அனுமதித்தாலும் இதில் பெண்களுக்கு குளிக்க அனுமதி மறுக்கப்பட்டதாகவும் தகவல்கள் உண்டு. மேலும் இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு தான் பெண்கள் குற்றால அருவியில் குளிக்க அனுமதிக்கப்பட்டனர் என்றும் கூறப்படுகிறது.
நாளை குற்றால வனத்தின் வளங்களை தெரிந்து கொள்வோம்.