அப்போ, ஜெ. vs ஜானகி.. இப்போ, பன்னீர்செல்வம் vs சசிகலா! தமிழகத்தில் மீண்டும் தலை தூக்கிய டூர் அரசியல்
சென்னை: எம்.ஜி.ஆரின் மறைவையடுத்து ஜெயலலிதா தலைமையில் அதிமுகவின் ஒரு அணியும், எம்.ஜி.ஆர் மனைவி ஜானகி தலைமையில் ஒரு அணியும் பிரிந்தது. அப்போது நடந்த ஹோட்டல் அரசியல் தமிழகத்தில் மீண்டும் எட்டிப்பார்த்துள்ளது.
அதிமுகவின் தலைவரும் முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர். 1987 டிசம்பர் 24 அன்று மரணமடைந்தார். அதைத் தொடர்ந்து அதிமுக இரண்டாக உடைந்தது. எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி ராமச்சந்திரன் 1988ம் ஆண்டு ஜனவரி 7ம் தேதி தமிழக முதல்வர் ஆனார். ஆனால், சட்ட சபையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முடியாததால் அதே ஆண்டு ஜனவரி 30ம் தேதி ஆட்சிப் பொறுப்பை இழந்தார்.
முன்னதாக, அரசு நிர்வாகத்தை கவனிக்க நெடுஞ்செழியன் தற்காலிக முதல்வராக பொறுப்பேற்றார். நிரந்தர முதல்வராக தானே போட்டியிடப்போவதாகவும் அறிவித்தார். அதை ஆர்.எம்.வீரப்பன் ஏற்றுக்கொள்ளவில்லை. எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகியை முதல்வர் ஆக்கப் போவதாக அவர் அறிவித்தார். இதனால், அதிருப்தி அடைந்த நெடுஞ்செழியன் ஜெயலலிதாவுடன் இணைந்தார்.
நெடுஞ்செழியன், திருநாவுக்கரசு, பண்ருட்டி ராமச்சந்திரன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், அரங்கநாயகம் போன்ற ஜெயலலிதாவின் ஆதரவாளர்கள் ஒன்றுகூடி அதிமுகவின் பொதுச் செயலாளராக ஜெயலலிதாவை தேர்ந்தெடுத்தனர்.
அதிமுக எம்.எல்.ஏக்களில் 98 பேர்கள் ஜானகிக்கு ஆதரவாகவும், 29 பேர்கள் ஜெயலலிதாவிற்கு ஆதரவாகவும் இருந்தனர். ஜானகி ஆதரவு எம்.எல்.ஏ,க்கள் அணி மாறிவிடக்கூடாதென்று ஒரு ஹோட்டலில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். ஜெயலலிதா ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 29 பேர் வட மாநிலத்திற்கு அழைத்துசெல்லப்பட்டு ஆம்னிவேனில் ஊர் சுற்றிக் காட்டப்பட்டனர். இது அப்போது பெரும் கேலிக் கூத்தாக அமைந்தது. ஜெயலலிதா ஆதரவாளர்களான திருநாவுக்கரசுவும், சாத்தூர் ராமச்சந்திரனும் இந்த டூர் சுற்றிக்காட்டும் வேலையை பார்த்துக்கொண்டனர்.
இந்நிலையில், இப்போது வரலாறு திரும்பியுள்ளது. இப்பவும் அதே அதிமுகவில் இந்த ஹோட்டல் கூத்து அரங்கேறியுள்ளது. சசிகலா தனது ஆதரவு எம்.எல்.ஏக்களை ஹோட்டல்களில் பத்திரப்படுத்தி வைத்துள்ளார். குதிரை பேரம் நடக்காமல் இருக்கவும், அவர்கள் ஓ.பி.எஸ் பக்கம் போகாமல் இருக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.