இப்ப எப்படி திருடுவீங்கன்னு பார்ப்போம்.. தென்னை மரத்தில் மண்டை ஓடுகளை கட்டி வைத்த பலே விவசாயி!
தேங்காய்கள் திருடப்படுவதை தடுக்க விவசாயி ஒருவர் வினோதமான செயலை செய்துள்ளார்.
மணப்பாறை: தேங்காய்கள் திருடப்படுவதை தடுக்க தென்னை மரத்தில் மனித மண்டை ஓடுகள், எலும்புகளை கட்டி ஒரு விவசாயி தொங்கவிட்டுள்ளதால், கிராம மக்களே அச்சமடைந்து கிடக்கிறார்களாம்.
மணப்பாறை: மணப்பாறை அருகே தென்னை மரத்தில் இளநீர், தேங்காய் திருட்டை தடுப்பதற்காக மனித மண்டை ஓடுகளை கட்டி தொங்க விட்ட விவசாயியின் செயலைக் கண்டு கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி அருகே உள்ளது கொண்டையம்பட்டி கிராமம். இங்கு, விவசாயி ஒருவருக்கு சொந்தமான 6 ஏக்கர் தென்னந்தோப்பு உள்ளது. இந்த தென்னந்தோப்புக்கு வேலி எதுவும் இன்றி திறந்தவெளியிலேயே உள்ளது.
இந்தநிலையில் தென்னந்தோப்பில் உள்ள ஒரு சில மரங்களில் தேங்காய் குலை தள்ளி காய்க்க தொடங்கியுள்ளதால், அடிக்கடி இளநீர் மற்றும் தேங்காய்கள் திருடப்பட்டு வருகின்றன. அடிக்கடி மரத்திலிருக்கும் இளநீர், தேங்காய்கள் காணாமல் போவதால் விவசாயி மிகவும் கவலை அடைந்தார்.
திருட்டை தடுக்க விவசாயி வினோத முடிவுக்கு வந்தார். இரவோடு இரவாக தென்னை மரங்களில் மனித மண்டை ஓடுகள் மற்றும் எலும்புகளை கட்டி வைத்து அதில் எலுமிச்சம்பழம், குங்குமம் ஆகியவற்றை வைத்துச் சென்றார். இதுபோன்று அந்த தோப்பில் 5 இடங்களில் கட்டி வைத்துள்ளார்.
மறுநாள் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் விவசாயின் இந்த செயலை கண்டு அதிர்ச்சியடைந்தனர். எலும்பு, எலும்பிச்சம் பழம் சரி, மண்டையோடு இவருக்கு எப்படி கிடைத்திருக்கும் என புரியாமல் விழிக்கிறார்கள். இதனை கண்ட சிலர் பயம் காரணமாக வராமலே உள்ளனராம். ஒருசிலர் விவசாயியின் வினோத காரியத்தை நேரில் வந்து பார்த்து செல்கின்றனராம்.