கணவரை கால் டாக்சி டிரைவர் மூலம் போட்டுத்தள்ளிய மனைவி.. சென்னையில் பயங்கரம்!
சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் திட்டிய கணவரை கால் டாக்சி டிரைவர் மூலம் மனைவியே போட்டுத் தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: ஈக்காட்டுத்தாங்கலில் தொழிலதிபர் உதயபாலன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கால் டாக்சி டிரைவர் மூலம் மனைவியே கணவனை கொலை செய்ய கூறியது அம்பலமாகியுள்ளது.
சென்னை ஈக்காட்டுத்தாங்கல் ஜோதிநகர் பிரதான தெருவை சேர்ந்தவர் உதயபாலன். தொழிலதிபரான இவர் எலக்ட்ரிக்கல் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வந்தார்.
இவரது மனைவி உதயலேகா. இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். உதயலேகா கடந்த 5ஆம் தேதி குழந்தைகளுடன் காரைக்காலில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார்.
படுகொலை செய்யப்பட்ட உதயபாலன்
அன்று நள்ளிரவு வீட்டில் தனியாக இருந்த உதயபாலன் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
படுக்கையில் தலையில் பலத்த வெட்டுகாயங்களுடன் பிணமாக கிடந்தார். அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்கச்சங்கிலி மற்றும் படுக்கை அறையில் இருந்த ரூ.30 ஆயிரம் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
கைதான கால் டாக்ஸி டிரைவர்
இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக கிண்டி போலீசார் முதலில் விசாரணை நடத்தினார்கள். அப்போது பிரபாகன் என்ற கால் டாக்சி டிரைவர் கைது செய்யப்பட்டார். பணத்துக்கும், நகைக்கும் ஆசைப்பட்டு உதயபாலனை கொலை செய்ததாக பிரபாகரன் முதலில் வாக்குமூலம் கொடுத்ததாக தெரிகிறது.
அதிர்ச்சித் தகவல்கள்
ஆனால் இந்த வழக்கில் விசாரணை சரிவர நடைபெறவில்லை என கூறப்பட்டதை தொடர்ந்து இந்த வழக்கு மத்திய குற்றப்புலனாய்வுத்துறைக்கு மாற்றப்பட்டது. மத்திய குற்றப்புலனாய்வுத்துறையினர் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகின.
மனைவி திடீர் கைது
கொலை செய்யப்பட்ட தொழில் அதிபர் உதயபாலனின் மனைவி உதயலேகா நேற்று கைது செய்யப்பட்டார். ஏற்கனவே கைதான பிரபாகரனும் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டார். இருவரிடமும் சாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் தொழில் அதிபர் உதயபாலன் கொலை செய்யப்பட்டது பற்றி இருவரும் திடுக்கிடும் வாக்குமூலம் அளித்தனர்.
மனைவி அளித்த வாக்குமூலம்
கணவர் உதயபாலன் கொலை குறித்து மனைவி உதயலேகா போலீஸில் வாக்குமூலம் அளித்துள்ளார். அதாவது, எம்.சி.ஏ. பட்டதாரியான உதயலேகாவின் தந்தையும் உதயபாலனின் தந்தையும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
கால் டாக்ஸி டிரைவருடன் பழக்கம்
தொழிலதிபரான உதயபாலன் தனது காரில் வெளியே சென்று வந்ததால், உதயலேகா வெளியேசெல்ல கால் டாக்ஸியை பயன்படுத்தியுள்ளார். அப்போது காரைக்காலைச் சேர்ந்த பிரபாகரன் என்ற கால் டாக்ஸி டிரைவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால் பிரபாகரன் அடிக்கடி உதயலேகாவை சந்திக்க அவரது வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். ஆனால் இது உதயபாலனுக்கு பிடிக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால் அவர் உதயலேகாவை கண்டித்துள்ளார்.
என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்
இதனால் வேதனைப்பட்ட உதயலேகாவுக்கு ஆறுதல் கூறி தன்பக்கம் இழுத்த பிரபாகரன், உதயபாலனை கொன்றுவிடலாம் என கூறியுள்ளார். முதலில் வேண்டாம் என்று கூறிய உதயலேகா, பின்னர் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள் எனக்கூறியுள்ளார்.
கொல்லப்பட்ட கணவர்
இதையடுத்து உதயலேகா குழந்தைகளுடன் காரைக்காலுக்கு சென்றுள்ளார். இதனை பயன்படுத்திக்கொண்ட பிரபாகரன் நள்ளிரவில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த உதயபாலனை தலையில் வெட்டியுள்ளார். இதில் மூளை சிதறி உதயபாலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உதயபாலனை கொலை செய்துவிட்டதாக உதயலேகாவுக்கு செல்போனிலும் பிரபாகரன் தகவல் தெரிவித்துள்ளார்.
பணக்காரர் ஆக வேண்டும்..
உதயலேகா தனது ஆசைக்கு இணங்க மறுத்ததால் வசதியான உதயபாலனை கொன்றுவிட்டு அவரது மனைவி உதயலேகாவை அடைவதோடு, அவர் மூலம் உதயபாலனின் செல்வத்தை அபகரித்து பணக்காரர் ஆக வேண்டும் என்ற எண்ணத்திலேயே அவரை தீர்த்துக்கட்டியதாக கால் டாக்ஸி டிரைவர் பிரபாகரன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
புழல் சிறையில் அடைப்பு
பிரபாகரனும், உதயலேகாவும் நேற்றிரவு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். கால் டாக்ஸி டிரைவர் மூலம் கட்டிய மனைவியே கணவரை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.