தொழிலதிபர் என்ற போர்வையில் வங்கியில் கடன் வாங்கி ஏப்பம் விட்ட "கொள்ளையர்கள்"
வங்கியில் கடன் வாங்கிக் கொண்டு திருப்பி செலுத்தாமல் ஏப்பம் விட்ட தொழிலதிபர்களின் பட்டியலை இங்கு பார்ப்போம்.
Recommended Video
சென்னை: தொழிலதிபர் என்ற பெயரில் வங்கியில் மோசடியாக கடனை வாங்கி கொண்டு அதை திருப்பி செலுத்தாதவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
வங்கிகளில் தொழில் தொடங்க பெரிய நிறுவனங்கள் முதல் சிறு குறு விவசாயிகள் வரை அவர்களின் பணம் திருப்பி செலுத்தும் திறமைக்கேற்ப கடன்கள் வழங்கப்படுகின்றன. பலர் இந்த கடன்களை வாங்கிக் கொண்டு வங்கியில் ஒழுங்காக செலுத்தி மேலும் மேலும் வளர்கின்றனர்.
ஆனால் இன்னும் சிலரோ பல்வேறு வங்கிகளில் மோசடியாக கடனை வாங்கி சொகுசு வாழ்க்கையில் செலவிட்டு கடைசியில் வங்கிகளுக்கு பட்டை நாமம் போடும் தொழிலதிபர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இதுபோன்ற மோசடி மன்னர்களை வங்கிகளும் கெடுபிடி காட்டாமல் ஏழை எளிய வியாபாரிகளை கேள்வி கேட்டு அவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு தள்ளிவிடுகின்றனர்.
விஜய் மல்லையா, நீரவ் மோடி, விக்ரம் கோத்தாரி, சுபிக்ஷா சுப்பிரமணியன், கனிஷ்க் நகைக் கடை உரிமையாளர் பூபேஷ் குமார் ஜெயின் ஆகியோர் தொழிலதிபர் என்ற போர்வையில் கொள்ளையர்களாகவே மாறிவிட்டனர் என்பது வேதனைக்குரிய சம்பவம்.
ரூ.9000 கோடி
கிங்பிஷர் நிறுவனத்தின் உரிமையாளர் விஜய் மல்லையா பல்வேறு நிறுவனங்களில் ரூ.9000 கோடி கடன்களை பெற்று கொண்டு அதை திருப்பி செலுத்தவில்லை. வங்கி அதிகாரிகள் கடனை திருப்பி செலுத்துமாறு அழுத்தம் கொடுத்தபோது லண்டனுக்கு தப்பி சென்றவர்தான், இதுவரை திரும்பவே இல்லை.
மோசடி மன்னன்
வங்கி மோசடியில் கைதேர்ந்தவரும் பிரபல வைர வியாபாரியுமான நீரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை பரோடி கிளையில் ரூ.11 ஆயிரம் கோடிக்கு கடன் பத்திரங்கள் மூலம் முறைகேடு செய்துள்ளதை வங்கி அதிகாரிகளே கண்டுபிடித்துவிட்டனர். அவரும் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார்.
சிக்கினார்
பிரபலமான ரோட்டோமேக் பென் நிறுவன அதிபர் விக்ரம் கோத்தாரி, பேங்க் ஆஃப் பரோடா வங்கிக்கு ரூ 800 கோடி கடனை திரும்ப செலுத்தவில்லை என புகார் எழுந்தது. இந்நிலையில் வெறும் 800 கோடியில்லை அது பல்லாயிரம் கோடி என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
சூப்பர் மார்க்கெட்
13 வங்கிகளிடம் இருந்து ரூ. 750 கோடி மோசடியாக கடன் வாங்கியதாக சுபிக்ஷா நிறுவன உரிமையாளர் சுப்ரமணியன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவரை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.
தங்க நகை நிறுவனம்
14 வங்கிகளை மோசடி செய்து சென்னையை சேர்ந்த தங்க நகை நிறுவனம் கனிஷ்க் ரூ. 824 கோடி மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த மோசடி குறித்து சிபிஐக்கு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா கடிதம் எழுதியுள்ளது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் பூபேஷ் குமார் ஜெயின் பஞ்சாப் நேஷனல் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட 14 வங்கிகளை மோசடி செய்து ரூ. 824 கோடி கடன் பெற்றுள்ளார். இப்படியே தொழிலதிபர்களெல்லாம் வங்கியில் பணத்தை கொள்ளையடிக்கும் செயல் நீண்டு கொண்டே போகிறது.