துப்பாக்கிசூடு.. மாஜி ஆட்சியர் வெங்கடேசனிடம் தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை
மாஜி ஆட்சியர் வெங்கடேசனிடம் மனித உரிமைகள் ஆணையம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின்போது ஆட்சியராக இருந்த வெங்கடேசனிடம் தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் கயமடைந்தனர். இந்த சம்பவத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதா என்பது குறித்து தேசிய மனித உரிமை ஆணையக்குழு மூத்த எஸ்பி பபுல் பிரிட்டோ பிரசாத் தலைமையில் நேரடியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக 5 பேர் கொண்ட குழுவானது தூத்துக்குடியிலேயே முகாமிட்டு உள்ளனர்.
நேற்று 3-வது நாளாக இக்குழுவினர் மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் விசாரணை நடத்தினர். ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் முதலில் துப்பாக்கி சூட்டில் பலியான 5 பேரின் குடும்பத்தினர் சாட்சியம் அளித்தனர். தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டதாக கூறப்படும் தாசில்தார் சந்திரன், துணைதாசில்தார்கள் சேகர், கண்ணன், துப்பாக்கிச்சூடு நடத்திய போலீசார், பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
சம்பவம் நடந்த அன்று பொறுப்பில் இருந்த ஆட்சியர் வெங்கடேசன், போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் ஆகியோரிடமும் விசாரணை நடத்த மனித உரிமை ஆணைய குழுவினர் நேற்று திட்டமிட்டிருந்தனர்.
அதன்படி, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் போது ஆட்சியராக இருந்த வெங்கடேசனிடம் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தற்போது 4-வது நாளாக விசாரணை நடத்தி வருகிறது. துணை வாட்டாட்சியர், போலீசாரிடம் தேசிய மனித உரிமை ஆணைய குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
துப்பாக்கி சூட்டின்போது மாவட்ட ஆட்சியர் எங்கிருந்தார், அது தொடர்பாக அவர் என்ன நடவடிக்கை எடுத்தார் என்பன போன்ற கேள்விகளை ஆணையம் அவரிடம் எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் மற்றும் காயம் அடைந்த காவல் துறையினரிடமும் மனித உரிமைகள் ஆணையம் விசாரணையை துவக்கியுள்ளது.