மீண்டும் வந்த பாப்பம்மாள்!.. அங்குதான் சமைப்பார்.. சமைக்க சொல்லி விருந்து சாப்பிட்ட 200 இளைஞர்கள்!
திருப்பூர் சத்துணவு பணியாளர் பாப்பம்மாள் மீண்டும் பழைய சர்ச்சைக்குரிய பள்ளிக்கே சத்துணவு பணியாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video
திருப்பூர்: திருப்பூர் சத்துணவு பணியாளர் பாப்பம்மாள் மீண்டும் பழைய சர்ச்சைக்குரிய பள்ளிக்கே சத்துணவு பணியாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதை கொண்டாட 200க்கும் அதிகமான இளைஞர்கள் அவரின் வீட்டிற்கு சென்று விருந்து சாப்பிட்டுள்ளனர்.
பாப்பம்மாள், எந்த ஒரு அதிகாரமும் இல்லாத, 40 வயது தாண்டிய, தலித் சமூகத்தில் பிறந்த இந்த பெண்ணால் என்ன செய்ய முடியும். இந்த ஒரு கேள்விதான் அவரை அரசு பணியில் இருந்து இடமாற்றம் செய்து தூக்கி அடித்தது. சிறுவர்களுக்கு சமைத்து போட்டு சந்தோசம் கண்ட ஒன்றும் அறியாத, பாப்பம்மாள், சாதிய வன்மத்தால் இடமாற்றம் செய்யப்பட்டார்.
இந்த சாதரண சத்துணவு பணியாளர்தான் தற்போது தமிழகத்தில் மிகமுக்கியமான செய்தியாக மாறியுள்ளார். கடந்த ஒரு வாரமாக இவருடைய வாழ்க்கையில் நடந்த சில அடுத்தடுத்த விஷயங்கள் ''பெரியார் மண்'' என்று பெயர் பெற்று இருக்கும் தமிழகத்திற்கு பல படிப்பினைகளை அளித்து இருக்கிறது.
நடந்தது என்ன
திருப்பூரை சேர்ந்த பாப்பம்மாள் என்ற சத்துணவு பணியாளர், 12 வருடமாக எந்த பிரச்சனையும் இல்லாமல் அரசு பள்ளிகளில் வேலை பார்த்து வந்துள்ளார். ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்துள்ள திருமலை கவுண்டம்பாளைய அரசு பள்ளிக்கூடத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். சொந்த ஊரில் உள்ள பள்ளி என்பதால் இவரும் சந்தோஷமாக சமைக்க தொடங்கியுள்ளார்.
சமைக்க கூடாது
ஆனால் பிரச்சனை ஜாதி ரீதியாக வந்துள்ளது. ஒரு தலித் சமூகத்தை சேர்ந்த பெண் எப்படி எங்க வீட்டு பிள்ளைகளுக்கு சமைக்கலாம் என்று அதே பகுதியை சேர்ந்த ஆதிக்க சாதியினர் வந்து சண்டையிட்டுள்ளனர். கெட்ட வார்த்தையில் மாணவர்கள் முன்னிலையில் பாப்பம்மாவை திட்டி இருக்கிறார்கள். அதோடு பாப்பம்மாள் இருக்கும் வரை மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டு வெளியேறி இருக்கிறார்கள்.
அவர்களே சமைத்தனர்
ஆனால் பாப்பம்மாள் அந்த இடத்தை விட்டு வெளியேறவில்லை. கோபம் கொண்ட ஆதிக்க சாதியினர் வீட்டில் இருந்து வந்த பெண்கள், பாப்பம்மாள் பயன்படுத்தும் சமையல் பாத்திரங்களை தூக்கி எறிந்துவிட்டு, வீட்டில் இருந்து பாத்திரம் கொண்டு வந்து அவரை வெளியே அனுப்பிவிட்டு அவர்களாகவே சமைத்து இருக்கிறார்கள். அதே வீட்டு ஆண்கள், தலைமை ஆசிரியரை மிரட்டி இருக்கிறார்கள்.
இடமாற்றம் செய்யப்பட்டார்
இந்த பிரச்சனை இதோடு நிற்கவில்லை. நேரடியாக உணவுத்துறையில் சில முக்கிய புள்ளிகளிடம் ஆதிக்க சாதியின் ஆட்கள் பேசி இருக்கிறார்கள். இதனால் பாப்பம்மாள் உடனே பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதற்கு முன்பு வேலை பார்த்த பள்ளிக்கே மீண்டும் சென்றார். கண்ணீருடன் மீண்டும் பாப்பம்மாள் பழைய பள்ளிக்கு சென்றார்.
பெரிய பிரச்சனை
இந்த பிரச்சனை தமிழகம் முழுக்க பெரிதானது. பெரியாரிய இயக்கம், தலித்திய இயக்கம், திராவிட இயக்கம் எல்லாம் இந்த பிரச்சனைக்கு எதிராக குரல் கொடுத்தன. இயக்குனர் ப.ரஞ்சித் மிக ஆக்ரோஷமாக டிவிட்டரில் இதுபற்றி கேள்வி எழுப்பி இருந்தார். இவர்கள் எல்லோரும் இந்த பிரச்னைக்கு சொன்ன ஒரே தீர்வு, பாப்பம்மாள் அதே பள்ளியில் வேலை பார்க்க வேண்டும், என்ன நடந்தாலும் அவர் அங்குதான் சமைக்க வேண்டும் என்பதுதான்.
மீண்டார்
அழுத்தம் அதிகரிக்கவே அரசு பின்வாங்கியது. பாப்பம்மாளுக்கு மீண்டும் பணியிட மாற்ற கடிதம் சென்றது. மீண்டும் திருமலை கவுண்டம்பாளைய அரசு பள்ளிக்கூடத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். இன்றிலிருந்து அவர் மீண்டும் பணியில் சேர்வார். இன்றிலிருந்து அவர் சமைப்பதையே மாணவர்கள் சாப்பிட வேண்டும்.
கொண்டாட்டம்
ஆனால் இதை மக்கள் கொண்டாடியதுதான் வித்தியாசமான நிகழ்வு. தமிழகம் முழுக்க பெரியாரிய, தலித்திய இயக்கத்தில் இருந்து 200க்கும் மேற்பட்ட போராளிகள், பாப்பம்மாள் வீட்டிற்கு விருந்திற்கு சென்று இருக்கிறார்கள். உணவு சமைக்க தேவையான பொருளுடன் சென்று, அவரை சமைக்க சொல்லி ஒன்றாக அவர் கையால் பரிமாற வைத்து, சமைக்க அவருக்கு உதவி, அவருடன் சேர்ந்து சாப்பிட்டுவிட்டு வந்து இருக்கிறார்கள்.
சமைத்து கொடுத்தார்
இவர்கள் எல்லோருக்கும் சமைத்துக் கொடுத்தது மிகவும் சந்தோசமாக விஷயம், மீண்டும் அந்த பள்ளிக்கே பணிக்கு செல்வது சந்தோஷமாக இருக்கிறது என்றுள்ளார் பாப்பம்மாள். இனி எத்தனை பிரச்சனை வந்தாலும், எத்தனை வருடம் ஆனாலும் பாப்பம்மாள் அதே பள்ளியில்தான் வேலை பார்க்க வேண்டும் என்று அந்த 200 இளைஞர்களும் கூறியுள்ளனர்.