சிதம்பரத்தின் வீட்டில் சோதனை நடப்பது அரசியல் பழிவாங்கும் செயல்: திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு
முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் விட்டில் சோதனை நடத்தப்படுவது அரசியல் பழிவாங்கும் செயல் என திருநாவுக்கரசர் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் வீட்டில் சோதனை நடத்தப்படுவது அரசியல் பழிவாங்கும் செயல் என திருநாவுக்கரசர் குற்றம்சாட்டியுள்ளார். இதையேதான் பாஜக அனைத்து மாநிலங்களிலும் பின்பற்றி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் வீட்டில் இன்று சிபிஐ அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தினர். சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், மற்றும் அவரது நண்பர்களின் வீடுகளிலும் ரெய்டு நடத்தப்பட்டது.
அலுவலகங்கள் வீடுகள் என நாடு முழுவதுவம் மொத்தம் 14 இடங்களில் ரெய்டு நடைபெற்றது. இதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அரசியல் பழிவாங்கும் செயல்
இதுதொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ப.சிதம்பரத்தின் வீட்டில் சோதனை நடப்பது அரசியல் பழிவாங்கும் செயல். பாஜகவுக்கு எதிராக சிதம்பரம் கருத்து தெரிவித்து வந்தார்.
அனைத்து மாநிலங்களிலும்..
இதைத் தடுக்கும் வகையில் பாஜக செயல்பட்டு வருகிறது. இதையேதான் அனைத்து மாநிலங்களிலும் பாஜக பின்பற்றி வருகிறது.
எதிர்க்கட்சிகளை மிரட்டுவதையே..
எதிர்க்கட்சிகளை மிரட்டுவதையே பாஜக கொள்கையாக கொண்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் தமிழகத்தில் பெரிய அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.
அங்கீகாரத்தை உருவாக்க..
இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள பாஜக முயற்சித்து வருகிறது. அதிமுக அமைச்சர்களை மிரட்டி தமிழகத்தில் அங்கீகாரத்தை உருவாக்க முயற்சிக்கிறது. இவ்வாறு திருநாவுக்கரசர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.