அமோகமாக முடிந்த கெங்கவல்லி ஜல்லிக்கட்டில் 700 காளைகள் பங்கேற்பு - பரிசுகளை அள்ளிய இளைஞர்கள்
சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் இன்று ஜல்லிக்கட்டு சிறப்பாக நடைபெற்றது.
சேலம்: சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் 700-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
மாவட்ட கலெக்டர் ரோகிணி உறுதி மொழி எடுத்து கொடி அசைத்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்த இப்போட்டியில், 700-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. ஒவ்வொரு காளைகளும் மருத்துவ பரிசோதைனைக்கு பின்னரே மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்டன
அதேபோல, இந்த போட்டியில் சேலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட மாடு பிடி வீரர்கள் மைதானத்தில் சீறிப்பாய்ந்த காளைகளை உற்சாகத்துடன் அடக்க முயன்றனர்.
இதில் திமிறிய காளைகளை அடக்க முயலாமல் மாடுபிடி வீரர்கள் திணறினர். வீரர்கள் சிலரை காளைகள் தூக்கி வீசின. சில வீரர்கள் விடாப்பிடியாக விரட்டி சென்று சீறிய காளைகளை அடக்கினர்.
சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் காளைகளை அடக்க முயன்ற இளைஞர்கள் சிலர் காயம் அடைந்தனர். காயம் அடைந்த வீரர்களுக்கு உடனே அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான மக்கள் இந்த ஜல்லிக்கட்டு கண்டு ரசித்தனர். இறுதியின் போட்டியில் காளைகளை அடக்கி வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.