அழைத்துப் பேசாத அரசு.. 2 வது நாளாக தொடரும் ஜாக்டோ ஜியோ உண்ணாவிரதம்!
2-வது நாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஜாக்டோ -ஜியோ அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர்.
Recommended Video
சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் நேற்று தொடங்கிய ஜாக்டோ -ஜியோ அமைப்பினரின் காலவரையற்ற உண்ணாவிரதம் போராட்டம் இன்று இரண்டாவது நாளாக நீடித்து வருகிறது.
பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும், 7-வது ஊதிய கமிஷன் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும், உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ கடந்த 7 ஆண்டுகளாக தொடர் போராட்டங்கள் நடத்தி வருகிறது. இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி அந்த அமைப்பினருடன் கடந்த ஆண்டு பேச்சுவார்த்தையும் அவர்களுடன் நடத்தியும் அது தோல்விதான் முடிந்தது.
இதனால் தங்களது கோரிக்கைள் இதுவரை ஏற்கப்படாததாலும், இனி அவற்றினை நிறைவேற்றக் கோரியும், தலைமை செயலகத்தை முற்றுகையிட போவதாக ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த மாதம் அறிவித்தனர். ஆனால், அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜாக்டா ஜியோ அமைப்பு நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். ஆனால் சென்னையில் மட்டும் தடையை மீறி போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், தங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து பிரச்சினை மற்றும் கோரிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க கோரி ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் சென்னை எழிலகத்தில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை நேற்று முதல் நடத்தி வருகின்றனர். இதில் அந்த அமைப்பினை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
இரண்டாவது நாள் உண்ணாவிரத போராட்டமான இன்று, ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினரை எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து பேசியதுடன், உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசியபோது, ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் தான் தமிழக அரசு கவனம் செலுத்துவதாக ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
இதனிடையே இன்று நடைபெற்ற பேரவை கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மாநில அரசின் நிதிநிலைமையைக் கருத்தில் கொண்டு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அடிக்கடி போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என்றார். அதேபோல, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமாரும், கடுமையான நிதி நெருக்கடியிலும் அரசு ஊழியர்களுக்கு 14,000 கோடி ரூபாய் ஊதியம் வழங்கப்படுவதாகவும், அனைவரின் கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் அரசின் எண்ணமாக இருந்தாலும் கோரிக்கையை நிறைவேற்ற அரசுக்கு மனம் உள்ளது, ஆனால் பணம் தான் இல்லை என்று தெரிவித்திருந்தார்.
ஆயினும் இதுவரை ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினரை தமிழக அரசு அழைத்து பேசவில்லை என்பதால், தொடர்ந்து 2-வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் தீவிரமாக அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.