கூடங்குளம் முதல் அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி துவங்கியது
கூடங்குளம்: கூடங்குளம் அணுமின் நிலைய முதல் அணு உலையில் ஏற்பட்ட பழுது சரி செய்யப்பட்டதை அடுத்து மீண்டும் மின் உற்பத்தி துவங்கி மின் உற்பத்தி 510 மெகா வாட்டாக உயர்ந்துள்ளது.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் இந்தியா ரஷ்யா கூட்டு முயற்சியில் தலா 1000 மெகா வாட் மின் உற்பத்தி திறனுள்ள இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் அணு உலை கடந்த 2013ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி அணு பிளவுக்கு உள்படுததப்பட்டது. அக்டோபர் 22ம் தேதி முதல் அங்கு மின் உற்பத்தி தொடங்கியது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் 24 ஆம் தேதி முதலாவது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தபட்டது. பல கட்ட பராமரிப்புப் பணிகளுக்குப் பிறகு, ஜனவரி 30ம் தேதி மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. எனினும், அன்று மாலையே மின்னுற்பத்தி நிறுத்தப்பட்டது. சில சோதனைகளுக்குப் பிறகு இம்மாதம் ஒன்றாம் தேதி மின்னுற்பத்தி மீண்டும் தொடங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வெப்ப நீர் செல்லும் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக கடந்த 4ம் தேதி மின் உற்பத்தி மீண்டும் நிறுத்தப்பட்டது.
இதனை சரி செய்யும் பணி நடைபெற்று, 7ம் தேதி அணு உலை மீண்டும் செயல்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பணிகள் தாமதமானதால், 14ம் தேதி மாலை மின் உற்பத்தி மீண்டும் துவங்கியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை மாலை மின் உற்பத்தி துவங்கியதை அடுத்து, இரவு 510 மெகா வாட்டாக மின் உற்பத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.