கூடங்குளம் 2-வது அணு உலையில் ஜூன் முதல் மின் உற்பத்தி: இயக்குநர் சுந்தர் தகவல்
நெல்லை: கூடங்குளம் இரண்டாவது அணு உலையில் வரும் ஜூன் மாதம் முதல் மின் உற்பத்தி தொடங்கும் என, அணு உலை வளாக இயக்குநர் ஆர்.எஸ். சுந்தர் தெரிவித்தார்.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் இந்தியா - ரஷ்யா கூட்டு முயற்சியில் தலா 1000 மெகா வாட் மின் உற்பத்தி திறனுள்ள இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. 3 மற்றும் 4-வது அணு உலைகள் அமைப்பதற்கான பூமி பூஜை சமீபத்தில் நடைபெற்றது. தொடர்ந்து மின் உற்பத்திக்கான பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த கூடங்குளம் அணு உலை வளாக இயக்குநர் சுந்தர் கூறியதாவது: திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் மத்திய அரசு மற்றும் ரஷிய அரசு உதவியுடன் 2 அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் உலையில் இப்போது 960 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு மத்திய தொகுப்பில் சேர்க்கப்பட்டு வருகிறது. விரைவில் ஆயிரம் மெகவாட் என்ற முழு கொள்ளவு எட்டப்படும்.
முதல் உலையில் கடந்த 2014 முதலே வர்த்தக ரீதியிலான மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இரண்டாவது அணு உலையில் இந்த மாத இறுதியிலோ, மே மாதத் தொடக்கத்திலோ எரிபொருள் நிரப்பும் பணி தொடங்கும். இதன் தொடர்ச்சியாக, அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்தின் அனுமதியைப் பெற்று மின் உற்பத்தியைத் தொடங்கவுள்ளோம்.
வரும் ஜூன் மாதம் முதல், 2-ஆவது உலையில் மின் உற்பத்தி நடைபெறும். கூடுதல் உலைகளான 3, 4-ஆவது அணு உலை அமைப்பதற்கான அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. வரும் டிசம்பரில் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாத அவர் தெரிவித்தார்.