பத்திரிகையாளர் ஷுஜாத் புகாரி சுட்டுக் கொலை.. கோவை மாவட்ட பத்திரிகையாளர்கள் கண்டனம்
ஷுஜாத் புகாரியின் மறைவுக்கு பத்திரிகையாளர்கள் அஞ்சலி செலுத்தினர்,
Recommended Video
கோவை: ஸ்ரீநகரில் பயங்கரவாதிகளால் சரமாரியாக சுட்டு கொல்லப்பட்டு உயிரிழந்த பத்திரிகை ஆசிரியர் ஷுஜாத் புகாரிக்கு கோவையில் அனைத்து பத்திரிக்கையாளர்கள் சார்பில் கண்டனங்கள் பதிவு செய்யப்பட்டன. அதனை தொடர்ந்து ஷுஜாத் புகாரியின் மறைவுக்கு மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் ரைசிங் காஷ்மீர் பத்திரிகை ஆசிரியராக இருந்த ஷுஜாத் புகாரி கடந்த 14 ஆம் தேதி ஸ்ரீநகர் லால்சவுக் பகுதியில் காரில் சென்றபோது, அவரை வழிமறித்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இந்த தாக்குதலில் ஷுஜாத் புகாரி, அவரது பாதுகாவலர்கள் இருவரும் உயிரிழந்தனர். இதற்கு அம்மாநில அரசு, மத்திய அரசு, அரசியல் கட்சிகள், பத்திரிக்கையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அதன்படி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் கோவை அனைத்து பத்திரிக்கையாளர்கள் ஷுஜாத் புகாரிக்கு அஞ்சலி செலுத்தினர். அப்போது, கருத்து சுதந்திரத்தை ஒடுக்கும் முயற்சியில் நடைபெறும் இதுபோன்ற படுகொலைக்கு கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.
மதத்திற்காக தான் பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டதாக கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்ததை சுட்டிக்காட்டிய பத்திரிக்கையாளர்கள், மதம், நிர்வாகத்தில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து வெளிக்கொண்டு வருவது என பல்வேறு வழிகளிலும் செய்தியாளர்களுக்கு அச்சுறுத்தல் வருவதாக தெரிவித்தனர்.
மேலும், ஷுஜாத் புகாரிக்கு பல ஆண்டுகளாக அச்சுறுத்தல் இருந்தும் மாநில அரசு பாதுகாப்பு வழங்காததும் உயிரிழப்பு நடந்ததற்கு காரணம் என்று குற்றச்சாட்டிய பத்திரிக்கையாளர்கள், 1 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.