கருணாநிதி நல்லடக்கத்தின்போது.. வெள்ளை உடையில் ஓடி ஓடி உழைத்தாரே.. அவர் யார் தெரியுமா?
திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி சடங்கு பணிகளை கட்சிதமாக நடத்திய அமுதா ஐஏஎஸ் தற்போது தமிழக மக்களால் பெரிய பாராட்டு பெற்று இருக்கிறார்.
Recommended Video
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி சடங்கு பணிகளை கட்சிதமாக நடத்திய அமுதா ஐஏஎஸ் தற்போது தமிழக மக்களால் பெரிய பாராட்டு பெற்று இருக்கிறார்.
நேற்று திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் நடந்தது. இதில் வெள்ளை நிற உடை அணிந்த இளம் பெண் ஒருவர், இங்கும் அங்கும் ஓடி ஓடி உழைத்துக் கொண்டு இருந்தார். பணிகள் அனைத்தையும் முன்னின்று நடத்தினார்.
இணையம் முழுக்க நேற்று இவர் யார், இவர் யார் , கருணாநிதியின் உறவுக்காரரா என்று கேள்வி எழுப்பினார்கள். அவர்தான் அமுதா ஐஏஎஸ், நேற்று இறுதி சடங்கு பணிகள் அனைத்தையும் முன்னின்று நடத்தி உள்ளார்.
யார் இவர்
பி அமுதா, ஐஏஎஸ், நேற்று இவர் தலைமையில்தான் இறுதி ஊர்வல பணிகள் நடந்தது. மிக பெரிய அனுபவம் கொண்ட இவர், கருணாநிதி ஆட்சியின் போது துணை ஆட்சியராக பணி உயர்வு பெற்றார். பின் ஆட்சியராக பணி உயர்வு பெற்றார். சென்னையில் வெள்ளம் வந்த போது இவர் செய்த பணிகளுக்காக பெரிய பாராட்டு பெற்றார். தாம்பரம் மணிமங்கலத்தில் சிக்கிய கர்ப்பிணி பெண்ணை மீட்டு பாராட்டுகளை பெற்றார். முதல் பெண் தொழிலாளர் நல ஆணையர் இவர். செங்கல்பட்டில் ஆக்கிரமிப்புகளை தடாலடியாக அகற்றியவர், இப்படி பல புகழுக்கு சொந்தக்காரர்.
கடைசி நேரத்தில்
நேற்று மெரினா வழக்கு நடந்து கொண்டு இருந்ததால், 11 மணிக்குத்தான் இவருக்கு முறையாக எங்கு இறுதி சடங்கு நடக்கும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்பின் துரிதமாக செயலாற்றி ராஜாஜி அரங்கிலும், மெரினாவில் பணிகளை முடுக்கிவிட்டு இருக்கிறார்கள். இதற்கு இடையில் ஊர்வலம் நடக்க வேண்டிய பகுதியிலும் ஏற்பாடுகளை தீவிரமாக செய்துள்ளார்.
கட்சி தொடர்பு
திமுக சார்பாக, இவருடன் எம்எல்ஏக்கள் ஏவா வேலு மற்றும் சேகர் பாபு ஆகியோர் தொடர்பில் இருந்துள்ளனர். தொடர்ந்து இவர்கள் மூலம், தொண்டர்களை சிறப்பாக கட்டுப்படுத்தி இருக்கிறார். மெரினாவில் அடக்கம் செய்ய, ஏற்பாடுகள் செய்து வந்த துரைமுருகன் அணியினருக்கு இவர்தான் ஆலோசனை வழங்கி கட்டளை இட்டது.
வழி நடத்தினார்
அதேபோல் நேற்று முழுக்க முழுக்க இவர் கருணாநிதியின் குடும்பத்தினருடன் நெருக்கமாக இருந்தார். கையில் தேசிய கொடியை வாங்கிவிட்டு என்ன செய்வது என்று தெரியாமல் நின்ற ஸ்டாலினுக்கு உதவியது தொடங்கி, கருணாநிதி வீட்டு பெண்களை ஒருங்கிணைத்து, மிக கட்சிதமாக இறுதி சடங்கை நடத்தியது வரை அனைத்து பணிகளையும் பார்த்துக் கொண்டார்.
கருணாநிதி
தனக்கு தனிப்பட்ட விதத்தில், கருணாநிதியை மிகவும் பிடிக்கும் என்று இவர் ஏற்கனவே கூறியுள்ளார். அவரது அரசியல் ஆளுமை மிகவும் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார். அவருடைய ஆட்சியில்தான் இவர் பதவி உயர்வு பெற்றார். நான் எப்போதும் அவரை மதிப்பேன் என்று செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
கடைசியில் பூ தூவினார்
நேற்று மிகவும் உணர்ச்சி வசப்படக்கூடிய செயல் ஒன்று நடந்தது. கருணாநிதியின் குடும்பத்தினர், எல்லோரும் வரிசையாக கருணாநிதியின் சமாதியில் பூ தூவி இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். அதன்பின் கடைசியாக அமுதாவும் பூ தூவி அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்வு பலரை கலங்க வைத்தது.