மானிய விலையில் ஸ்கூட்டர்- விண்ணப்பிக்க பிப். 10 வரை கால அவகாசம் நீட்டிப்பு
மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க பிப். 10ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
சென்னை: தமிழக அரசு அறிவித்துள்ள மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 10ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
வேலைக்குச் செல்லும் மகளிர் பயனுறும் வகையில் இரு சக்கர வாகனம் வாங்கிட ரூ.25 ஆயிரம் மானியம் அரசு சார்பில் வழங்கப்படும் என கடந்த 2016 சட்டசபைக்கான தேர்தல் அறிக்கையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
இந்தத் திட்டத்தை தற்போதைய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24ம் தேதி இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதற்காக தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், அதற்கான விண்ணப்பம் ஊராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் வழங்கப்படும் என்றும் ஜனவரி 22ம் தேதி அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து மானிய விலை ஸ்கூட்டர் வாங்க விண்ணப்பிக்கவும், இரு சக்கர வாகனத்திற்கான ஓட்டுநர் உரிமம் பெறவும் பெண்கள் பெருமளவு வட்டாரப்போக்குவரத்து அலுவலகங்களிலும் குவிந்தனர்.
மானிய விலை ஸ்கூட்டருக்கு விண்ணப்பிக்க நேற்றே கடைசி நாள் என்று அறிவித்து இருந்த நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் பெண்கள் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில், விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் பிப்ரவரி 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஒரு லட்சம் விண்ணப்பங்கள் பெற அரசு திட்டமிட்டு இருந்த நிலையில், குறைந்த அளவிலேயே விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளதால், கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசின் இந்த கால அவகாச நீட்டிப்பு அறிவிப்பால் பெண்கள் மிகுந்த உற்சாகம் அடைந்து உள்ளனர். அதனால் தொடர்ந்து இன்றும் ஊராட்சி, பேரூராட்சி அலுவலகங்களுக்கு படையெடுக்கத் துவங்கி உள்ளனர்.