தனியார் பள்ளிகளுக்கான கட்டணத்தை முறைப்படுத்தும் சட்டத்தில் மாற்றம்.. சட்டசபையில் இன்று தாக்கல்!
தனியார் பள்ளிகளுக்கான கட்டணத்தை முறைப்படுத்தும் சட்டத்தில் மாற்றம் செய்யப்படவுள்ளது.
சென்னை: தனியார் பள்ளிகளுக்கான கட்டணத்தை முறைப்படுத்தும் சட்டத்தில் மாற்றம் செய்யப்படவுள்ளது. இதற்கான மசோதா இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது.
தமிழகத்தில் தனியார் நர்சரி பள்ளிகள், தொடக்கப்பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 11 ஆயிரம் தனியார் பள்ளிகள் இருக்கின்றன. அந்த பள்ளிகளில் அதிக கல்வி கட்டணம் வசூலிக்கப்படுவதாக அரசுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது.
இதனையடுத்து தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க ஓய்வு பெற்ற நீதிபதி சிங்காரவேலு தலைமையில் கல்வி கட்டண கமிட்டி அமைக்கப்பட்டது. சிங்காரவேலுவின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி டி.வி.மாசிலாமணி தலைமையில் கல்வி கட்டண கமிட்டி அமைக்கப்பட்டது.
இந்நிலையில் தனியார் பள்ளிகளுக்கான கட்டணத்தை முறைப்படுத்தும் சட்டத்தில் தமிழக அரசு மாற்றம் செய்யவுள்ளது. இதற்கான புதிய மசோதா சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.
இதன்மூலம் 2009ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்தில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த சட்டத்தின் மூலம் தனியார் பள்ளிகளில் குழு அமைத்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் அமைச்சர் செங்கோட்டையன் புதிய சட்ட திருத்தத்தை சட்டசபையில் தாக்கல் செய்யவுள்ளார்.