பொது வாழ்க்கையில் நாகரீகம் தேவை.. இல்லாவிட்டால் சட்டம் கடமையைச் செய்யும்.. முதல்வர்
சட்டம் தன் கடமையை செய்யும் என முதலமைச்சர் கூறியுள்ளார்.
Recommended Video
மதுரை: அரசியல் இருப்பவர்கள் பொதுவாழ்க்கைக்கு வந்துவிட்டால் நாகரீகமாக நடந்து கொள்ள வேண்டும். அப்படி நடக்காவிட்டால் சட்டம் தன் கடமையை செய்யும் என்று எச்.ராஜா, கருணாஸ் போன்றோரின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் கருணாஸ், மற்றும் எஸ்.வி.சேகரன் கைது நடவடிக்கை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
சட்டம் கடமையை செய்யும்
அதற்கு பதிலளித்த முதலமைச்சர் இவ்வாறு கூறினார். "சட்டம் தன் கடமையை செய்யும். எதையும் தவறவிடவில்லை. எல்லாம் சரியாக நடந்து கொண்டிருக்கிறது. காவல்துறை தன் கடமையை நிச்சயம் நிறைவேற்றித் தருவார்கள். தவறுக்கு உண்டான நடவடிக்கையை காவல்துறை நடவடிக்கை எடுக்கும். பொதுவாழ்வில் வந்துவிட்டால் அதை எப்படி கடைப்பிடிக்க வேண்டும் என்ற அந்த நாகரீகம் தெரியாமல் சில பேர் நடந்து கொள்கிறார்கள் சட்டம் அதற்கு தகுந்த கடமையை செய்யும்" என்றார்.
மதுரையில் எய்ம்ஸ்
பின்னர், கடம்பூர் ராஜூ மீது சண்முகராஜன் கூறியுள்ள குற்றச்சாட்டு குறித்து கேட்டதற்கு, "தவறான கருத்து. அம்மாவின் அரசு சாதனைகளை செய்து கொண்டிருக்கிறது. அம்மா செய்த சாதனைகளை மக்களிடம் சென்றடைந்து உள்ளது. இன்னும் புதிய திட்டங்களை நாங்கள் செய்ய இருக்கிறோம். ஆகவே திருப்பரங்குன்றம் திருவாரூரிலும் . தேர்தல் குறித்து தேர்தல் கமிஷன் முடிவு செய்யும். நிச்சயம் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை வருவதற்கான அனைத்து நடவடிக்கையும் அரசு எடுத்துக் கொண்டு இருக்கிறது" என்று முதலமைச்சர் பதிலளித்தார்.
கலைக்கப்பட்ட திமுக அரசு
திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து தமிழக அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டை சொல்லி வருகிறாரே என்ற கேள்விக்கு, "ஊழல் குற்றச்சாட்டே அவர்கள் மீதுதான் உள்ளது. ஊழலுக்காக கலைக்கப்பட்ட அரசு என்றால் அது திமுக தான். அது உலகமே தெரியும்" என்றார்.
விலைவாசி உயரும்
பின்னர் இறுதியாக பெட்ரோல் டீசல் விலை குறித்து பேசிய முதலமைச்சர், இந்த விலை நிர்ணயம் என்பது மத்திய அரசின் கீழ் வருகிறது. மாநில அரசுக்கு அல்ல. மத்திய அரசுதான் அதை குறைக்க வேண்டும். நாங்களும் அதை வலியுறுத்தி சொல்லி வருகிறோம். இதனால் விலைவாசி உயரும். ஆகையால் மத்திய அரசு இதை கட்டுப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளோம்." என்று பதிலளித்தார்.