வால்பாறையில் பயங்கரம்.. பெண்ணை இழுத்து சென்று கடித்து குதறி தின்ற சிறுத்தை.. பொதுமக்கள் ஆவேசம்
சிறுத்தை கடித்து குதறியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
கோவை: வால்பாறை கருமலை எஸ்டேட்டில் சிறுத்தை தாக்கி பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த ஆவேசமடைந்த பொதுமக்கள் தேயிலை தோட்டத்திற்குள் உடலை எடுக்க விடாமல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம் வால்பாறையில் இருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ளது காஞ்சமலை எஸ்டேட். இங்கு நேற்றிரவு 7 மணி அளவில் வீட்டின் முன்பாக கைலாசவதி என்ற 52 வயது பெண், துணி துவைத்து கொண்டிருந்தார். ஆனால் சிறிது நேரத்தில் அவரை காணவில்லை. அத்துடன் அவர் துணி துவைத்த இடம் முழுவதும் ரத்தமாக கிடந்தது.
இதையடுத்து உறவினர்கள் அந்த இரவு நேரத்தில் கைகளில் விளக்குகளை பிடித்து அவரை தேடி வனப்பகுதியில் அலைந்தனர். அப்போது அங்கு புதர் ஒன்றில் சடலமாக கிடந்த அந்த பெண்ணை ஒரு சிறுத்தை இழுத்து சென்று கடித்து குதறிகொண்டிருந்தது. உடலை பாதி கடித்து தின்ற நிலையில் நிலையில், பொதுமக்கள் திரண்டு வருவதை கண்டதும் ஓடிவிட்டது.
பெண்ணை கண்டதும் பொதுமக்கள் அதிர்ச்சியும், கலக்கமும் அடைந்தனர். நேற்று முன்தினமும் வால்பாறை சிங்கோணா எஸ்டேட்டில் சிறுத்தை தாக்கி படுகாயங்களுடன் மாதவி என்ற பெண் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் சிறுத்தை மற்றொரு பெண்ணையும் கொன்றுவிட்டதால் பொதுமக்கள் ஆவேசமடைந்தனர்.
சிறுத்தைகளை தடுக்க வனத்துறையினர் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டினர். இதனால் ஆத்திரமடைந்த 300-க்கும் மேற்பட்டோர் பெண்ணின் சடலத்தை எடுக்க விடாமல் வனத்துறை மற்றும் எஸ்டேட் நிர்வாகத்தின் அலட்சிய போக்கை கண்டித்து சாலைமறியலிலும் ஈடுபட்டனர். அத்துடன் அரசு தேயிலை தோட்ட கழக மேலாண்மை இயக்குனரையும் சிறைபிடித்தனர்.