ஜி.சாட்-6 ஏ செயற்கைகோளின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டது: நெல்லையில் இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்
ஜி.சாட்-6 ஏ இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை: பருவநிலை மாற்றம் குறித்து அறிந்துகொள்ள சமீபத்தில் அனுப்பப்பட்ட ஜி.சாட்-6 ஏ செயற்கைகோளின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். மேலும் அதனுடன் தகவல் தொடர்பு இணைப்பை பெற இஸ்ரோ விஞ்ஞானிகள் முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் சிவன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் முதல் முறையாக செயற்கைகோள் கண்காணிப்பு தகவல் சேகரிப்பு மையம் நெல்லை அரசு இன்ஜினியரிங் கல்லூரிக்கு எதிரே உள்ள கடற்படைக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்பட உள்ளது. 82 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள இந்த மையத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று நடைபெற்றது. இந்த அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்று இஸ்ரோ தலைவர் சிவன் அடிக்கல்லை நாட்டினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இந்த செயற்கைகோள் கண்காணிப்பு தகவல் சேகரிப்பு மையம் தென் பகுதியில் முதல் முறையாக அமைக்கப்பட இருப்பதாக கூறினார்.
பருவநிலை மாற்றம் குறித்து அறிந்துகொள்ள சமீபத்தில் அனுப்பப்பட்ட ஜி.சாட்-6 ஏ செயற்கைகோளின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் அதனுடன் தொலை தொடர்பு இணைப்பை ஏற்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் முயற்சி செய்துவருதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
சந்திராயன்-2 விண்ணுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் அனுப்பப்படும் என உறுதி தெரிவித்துள்ள சிவன் இதில் ரோபோக்கள் பயன்படுத்தி நிலவில் இருந்து ஆய்வுகள் மேற்கொள்ளும்படி வடிவமைக்கப்பட்டு வருவதாக கூறினார்.
கடலில் மீன்பிடிக்கச்செல்லும் மீனவர்களுக்கு உதவும் வகையில் செயலி ஒன்று உருக்கப்பட்டு இருப்பதாகவும் இதனை இதற்கான சிறப்பு கருவியுடன் புளு டூத் மூலம் இணைப்பதால் மீனவர்களின் இருப்பிடம், மீன்வளம் மற்றும் சர்வதேச எல்லைக்கான எச்சரிக்கை உள்ளிட்ட வசதிகளை மீனவர்கள் பெறமுடியும் என்றார்.
இதனை சாதாரண பாமர மீனவர்களும் புரிந்துகொள்ளும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டு இருப்பதாகவும், இதற்கான சிறப்பு கருவிகள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் இவை பயன்பாட்டுக்கு வரும் என்றும் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.