தீவிரமடைகிறது காற்றழுத்த தாழ்வுமண்டலம்.. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்:வானிலை மையம் எச்சரிக்கை!
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுவதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video
சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுவதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அந்தமான் அருகே வங்கக்கடலில் உருவான காற்றழுத்தம் புயலாக மாற வாய்ப்புள்ளது என்றும், இது வட தமிழகம் மற்றும் தென் தமிழகம் இடையே கரையை கடக்கும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இதனால் சென்னை மீண்டும் ஒரு கனமழையை பெறும் என்றும் எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இந்த காற்றழுத்தம் ஆந்திரா நோக்கி நகர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மசூலிப்பட்டினம் அருகே நீடிப்பு
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நேற்று நிலை கொண்டிருந்த குறைந்த காற்றுழுத்த தாழ்வு மண்டலம் வடதிசையில் நகர்ந்து மசூலிப்பட்டினம் அருகே நிலை கொண்டிருப்பதாக அவர் கூறினார்.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம்
வங்கக் கடலில் உருவாகியுள்ள இந்த குறைந்த காற்றுழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு ஆந்திரா, ஒடிசா கடற்கரை பகுதியை நோக்கி வரும் 9 ஆம் தேதி நகரும் என்றும் அவர் கூறினார்.
மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுவதாகவும் அவர் தெரிவித்தார்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
இதனால் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய 2 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று பாலச்சந்திரன் எச்சரித்துள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விருதுநகரில் 11 செ.மீ., மழை பெய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
சென்னையில் மேகமூட்டம்
இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்தார். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.