நடிகர் சரத்குமாருக்கு ரூ.2 லட்சம் அபராதம்.. சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
கடனுக்காக அளித்த சொத்தை விற்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில், நடிகர் சரத்குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை: நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ரூ.2 லட்சம் அபராதம் விதித்துள்ளது. கடனுக்காக அளித்த சொத்தை விற்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகை ராதிகா மற்றும் சரத்குமார் ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள மேஜிக் ஃபிரேம்ஸ் நிறுவனம் சார்பில், நடிகர் விக்ரம்பிரபு, கீர்த்தி சுரேஷ் நடித்த படம் 'இது என்ன மாயம்'. இப்படத்தின் தயாரிப்புக்காக ராடியன்ஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து சரத்குமார் நிறுவனம் ஒன்றரை கோடி ரூபாய் கடன் வாங்கி இருந்தது. 2014 ஆம் ஆண்டு வாங்கப்பட்ட இந்த பணத்தை 2015 மார்ச் மாதத்திற்குள் திருப்பி தருவதாக உறுதி அளித்திருந்தனர்.
பணத்தைக் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டால், படத்தின் தொலைக்காட்சி உரிமையையும், அடுத்து எடுக்கும் படத்தின் உரிமையையும் வழங்குவதாக சரத்குமார் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதனிடையே கூடுதலாக ஒரு கோடி ரூபாய் கடன் கேட்டு தியாகராயநகர் மற்றும் திருநெல்வேலியில் உள்ள சொத்துக்களை அடமானமாக வைத்துள்ளது மேஜிக் ஃபிரேம்ஸ் நிறுவனம். ஆனால் ஒப்பந்தத்தை மீறி படத்தை ரிலீஸ் செய்துவிட்டனர்.
இதையடுத்து தங்களுக்கு தர வேண்டிய இரண்டரை கோடி ரூபாய் பணத்தை வட்டியுடன் சேர்த்து தர உத்தரவிட கோரியும் கடனுக்காக அடமானமாக வைத்த சொத்துக்களை விற்க முயன்றதாகவும் சரத்குமார் மீது வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சரத்குமாருக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் தம்மீதான வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி சரத்குமார் சார்பில் தாக்கல் செய்த மனுவையும் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.