நரேந்திர மோடியோடு இணைந்து காங்கிரஸைத் தோற்கடித்த ராகுல் காந்தி!
சென்னை: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்குக் கிடைத்துள்ள பெரும் தோல்விக்கு சாட்சாத் ராகுல் காந்தியே முக்கியக் காரணம் என்று தாராளமாக கூறலாம்.
விளையாட்டு வினையானது:
எப்போதும் சிறுபிள்ளத்தனமான நடவடிக்கைகளையே மேற்கொண்டு வந்த ராகுல் காந்தி, தங்களை ஆட்சியில் வைத்திருந்த கூட்டணிக் கட்சிகளையும் பிரதமரையும் மதிக்காமல் இளவரசர் மாதிரி ஒரு வாழ்க்கை வாழ்ந்தார்.
வெற்றியில் மண்:
அந்த விளையாட்டுப் போக்கே தற்போது காங்கிரஸின் வெற்றியில் மண் அள்ளிப் போட்டுள்ளது. அரசியல் பற்றிய ஒரு தெளிவான சிந்தனை இல்லாத ராகுல் காந்தி, ராஜீவ்-சோனியாவின் மகன் என்ற ஒரே காரணத்திற்காக அனுபவம் மிக்க தலைவர்களை கீழே தள்ளி துணைத்தலைவர் பதவியைப் பிடித்தார்.
வாரிசு பதவி போதுமா?:
ஆனால், திறமையை பின்னுக்கு தள்ளிவிட்டு வாரிசு என்ற ஒரே காரணத்திற்காக சோனியா, ராகுலின் கையில் கட்சியை ஒப்படைத்ததுதான் தற்போது தவறாகி விட்டது. குருட்டாம் போக்கில் கட்சியின் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், ஆட்சியைப் பற்றி ஸ்திரமில்லாத தன்மை, டிவிக்களுக்கு அளித்த முதிர்ச்சியற்ற பேட்டி என்று ராகுலின் பக்கம் குற்றச்சாட்டுகள் நீண்டுகொண்டே போகின்றன.
மக்களை கவராத ராகுல்:
மோடியை எதிர்த்து பேசுவதாக நினைத்துக் கொண்டு மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வைக் கூறுவதில் கோட்டை விட்டார் ராகுல். எப்பொழுதும் ஒப்பிப்பதைப் போலவே பேசிய ராகுலால், அனுபவம் வாய்ந்த மோடியின் மக்களைக் கவரும் பேச்சிற்கு ஈடு கொடுக்க இயலவில்லை. மேலும், காங்கிரஸ் வேட்பாளார்களை தேர்வு செய்வதில் நிலவிய குழப்படியும் மிக முக்கிய காரணமாக அமைந்துவிட்டது.
அதிமுக கைக்கு வெற்றி:
மேலும், தமிழ்நாட்டினைப் பொறுத்த வரை இலங்கை விவகாரமும், பேரறிவாளன், சாந்தன், முருகன் வழக்கில் காங்கிரஸின் தவறான நிலைப்பாடும் அதன் வெற்றிப் படிகளை நசுக்கிவிட்டது என்பதே உண்மை. இந்த, இடத்தில் ஜெயலலிதா வெற்றியைத் தட்டிக் கொண்டு விட்டார்.
குடும்பப் பிரச்சனை:
இலங்கை பிரச்சினையை மக்களின் பிரச்சினையாக பார்த்து தீர்ப்பளிக்காமல், ராஜீவ் குடும்பத்தின் தனிமனித் பிரச்சினையாக காங்கிரஸ் பார்த்ததே அதன் படு தோல்விக்கு வழிவகை செய்தது என்று கூறினால் மிகையாகாது.