விரைவில் தூத்துக்குடி மக்கள் தாய் மடியில் அமர்வார்கள், கைவிட மாட்டோம்.. பொள்ளாச்சி ஜெயராமன்
தூத்துக்குடி மக்களை கைவிட மாட்டோம் என பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
கோவை: தூத்துக்குடி மக்களை சாந்தப்படுத்தும் கடமை தங்களுக்கு உண்டு, எனவே மக்களை சாந்தப்படுத்துவோம், கைவிட மாட்டோம் என துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார். மேலும் தூத்துக்குடி மக்களுக்கு இப்போது கசப்புணர்வு இருந்தாலும், விரைவில் தாயின் மடியில் கண்டிப்பாக அமர்வார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:
இன்று சபாநாயகர் அலுவலகத்தில் நடைபெற்ற அலுவல் ஆய்வு கூட்டத்தில் கலந்துகொண்ட ஸ்டாலின் திடீரென கூட்டதை விட்டு வெளியே சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். எதிர்கட்சி தலைவராக செயல்படுவதை எடுத்துக்காட்டவே இவ்வாறு ஸ்டாலின் செய்துள்ளார். இது போன்ற நிகழ்வுகளை ஸ்டாலின் கைவிட வேண்டும்.
தூத்துக்குடியில் தமிழக காவல் துறை சிறப்பாக செயல்படுகின்றனர். எனவே துணை இராணுவத்தை அழைக்க வேண்டிய தேவையில்லை. மக்களை துன்புறுத்தும் எண்ணம் அதிமுகவிற்கு கிடையாது. போராட்டத்தை சிலர் தூண்டு விடுகிறார்கள். 200, 300 ஓட்டுகூட இல்லாதவர்கள், டெபாசிட் வாங்காதவர் தங்கள் இருப்பை காட்டி கொள்ள மக்களை தூண்டிவிடுகிறார்கள். ஊடங்கள், போராட்டத்தை தூண்டுபவர்களை கண்டிக்க வேண்டும்.
துப்பாக்கு சூடு சம்பவம் மனவேதனை அளிக்கும் அதேவேளையில் போராட்டக்காரர்கள் என்ன செயலில் ஈடுபட்டார்கள், காவலர்கள் ஏன் செய்தார்கள் என்பது ஒரு நபர் விசாரணை முடிவில்தான் தெரியும். பொத்தாம் பொதுவாக காவல்துறை மோசம் என சொல்வது தவறு. தமிழக அரசின் கட்டுப்பாட்டில்தான் காவல்துறை இருக்கிறது. காவல் துறையை யாரும் மட்டம் தட்டக்கூடாது.
ஸ்டெர்லைட் ஆலைக்கான அனுமதி கொடுத்தது திமுகதான். இந்த பிரச்சினைக்கு மொத்த காரணமும் திமுகதான். அமைச்சர்கள் நிச்சயம் தூத்துக்குடி செல்வார்கள். செல்வதில் தயக்கமில்லை. அரசியல் கட்சிகள் நாங்கள் இருக்கிறோம் என்பதை காட்டிகொள்ளவே போராடுகிறார்கள். தூத்துக்குடி மக்களை சாந்தப்படுத்தும் கடமை தங்களுக்கு உண்டு. எனவே மக்களை சாந்தப்படுத்துவோம், கைவிட மாட்டோம்.
தேவையில்லாத வதந்தியை பரப்ப கூடாது என்பதற்காக இணைய சேவையை தடுத்துள்ளோம். தூத்துக்குடி மக்களுக்கு இப்போது கசப்புணர்வு இருந்தாலும், விரைவில் தாயின் மடியில் கண்டிப்பாக அமர்வார்கள். முதல்வரின் ஓராண்டு ஆட்சியில், இப்போதுதான் இது போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. இந்தியா போன்ற பெரிய நாட்டில் எங்கோ ஒரு பகுதியில் ஏதோ ஒரு சம்பவம் நடந்துகொண்டுதான் இருக்கும், சம்பவம் நடைபெறாமல் இருக்காது, அது போலதான் இதுவும்.
இவ்வாறு துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.