சுங்கத்துறையிடம் இருந்த செம்மரக்கட்டைகளை எடுத்துவிட்டு வைக்கோலை வைத்த கும்பல்.. பலே திருட்டு
தூத்துக்குடி: சுங்கத்துறை பாதுகாப்பில் இருந்த செம்மரக்கட்டைகளை எடுத்து விட்டு வைக்கோலை வைத்த மர்ம நபர்களை சுங்கத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடியில் இருந்து மலேசியாவுக்கு கடத்தப்பட இருந்த 15 டன் செம்மரக்கட்டைகள் மத்திய வருவாய் புனலாய்வு பிரிவு அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர். இந்த செம்மரங்களை பெரிய கண்டெய்னர்களில் அடைத்து சீல் வைத்து துறைமுக பைபாஸ் ரோட்டில் சுங்கத்துறைக்கு சொந்தமான டெர்மினலில் பாதுகாப்பாக வைத்திருந்தனர்.
இந்த செம்மரங்கள் கடத்தல் தொடர்பாக கோர்டில் வழக்கு நடந்து வருவதால் அடிக்கடி அதிகாரிகள் அதனை சோதனை செய்து வந்தனர். இந்நிலையில் கோர்ட்டில் வழக்கு முடிந்ததால் செம்மரக்கட்டைகளை ஏலம் விட கோர்ட் உத்தரவிட்டது.
இதையடுத்து மாலை சீல் வைக்கப்பட்ட கன்டெய்னர்கள் சுங்கதுறை அலுவலகத்துக்கு எடுத்து வரப்பட்டது. ஆனால் சீல் வைக்கப்பட்ட கன்டெய்னரில் சீல் வேறுவிதமாக இருந்ததால் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
சீலை உடைத்து பார்த்த போது கன்டெய்னிரில் செம்மரக்கட்டைகளுக்கு பதிலாக வெறும் வைக்கோல் இருந்தது. இதை பார்த்து அதிர்ந்த சுங்கதுறை அதிகாரிகள் மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து விசாரணை நடத்தியதில் கடந்த இரண்டு மாதங்களாகவே இந்த நூதன திருட்டில் மர்ம நபர்கள் ஈடுபட்டுள்னர் என தெரிய வந்துள்ளது.
சிசிடிவி கேமரா இயக்கம் நிறுத்தப்பட்டு திருடப்பட்டுள்ளதால் தனியார் டெர்மினல் ஊழியர்கள் மீது சுங்கதுறையினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் அந்த டெர்மினலுக்கு அங்கீகாரம் உடனடியாக ரத்து செய்யப்பட்டது. அங்கு மேல் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.