ஒரு தாயின் பாச போராட்டம்.. இறந்த குட்டியை சுமந்து கொண்டு அங்குமிங்கும் அலைந்த குரங்கு!
தாய்குரங்கின் பாசம் கண்டு பொதுமக்கள் கண்கலங்கினர்.
Recommended Video
ஊட்டி: குன்னூர் ரோட்டில் குரங்கு ஒன்றின் பாசப்போராட்டம் கண்டு சாலையில் போவோர் வருவோர் எல்லாம் கண்கலங்கி நின்றனர்.
குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையானது மிக முக்கியமான சாலையாகும். எப்போதுமே வாகனங்கள் சென்று வந்து கொண்டிருக்கும். அதனால் சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட ஏராளமானோர் வந்து செல்வதால் போக்குவரத்து நிறைந்து காணப்படும். அப்படி சுற்றுலா பயணிகள் செல்லும்போது குறுக்கும் நெடுக்குமாக ஓடியும், ஒளிந்தும், விளையாடியும் வரும் குரங்குகளை கவனிக்க தவறுவதே இல்லை.
லபக்கென பிடுங்கும்
பேருந்துக்குள், காருக்குள், ஊட்டிக்கு சுற்றுலா வரும் பயணிகள் எந்த பொருள் சாப்பிட கையில் வைத்திருந்தாலும் லபக்கென்று பிடுங்கி கொண்டு ஓடிவிடும். குரங்குகளுக்கு உணவு பொருட்களை போட வேண்டாம் என வனத்துறை பலமுறை கேட்டுக் கொண்டாலும், அது இன்னும் குறைந்தபாடு இல்லை.
அடிபட்டு இறந்தது
இந்நிலையில், இன்று குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் குரங்கு ஒன்று இங்கும் அங்கும் ஓடி கொண்டே இருந்தது. அதன் கையில் மற்றொரு குட்டிக்குரங்கு. அந்த குரங்கினை மார்போடு அணைத்துக் கொண்டு வேகவேகமாக ஒரே இடத்தில் சுற்றி சுற்றி வந்தது. சுற்றுலா பயணிகள் இதனை உற்று கவனித்தபோதுதான் தெரிந்தது குட்டி குரங்கு, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனத்தில் அடிபட்டு இறந்தது என்று.
தரதரவென இழுத்து சென்றது
தன் குட்டி இறந்ததுகூட தெரியாமல் அந்த தாய் குரங்கு அதனை தூக்கி வைத்து மார்போடு அணைத்து கொண்டே இருந்தது. இந்த பாசப்போட்டத்தினை கண்டு ஏராளமானோர் பிரதான சாலையிலேயே கூடிவிட்டனர். ஆட்கள் நம்மை கவனிக்கிறார்கள், அதிகரித்துவிட்டார்கள் என்று தெரிந்துகொண்ட குரங்கு, குட்டியின் உடலை தர, தரவென இழுத்துக்கொண்டு சென்றது.
நிற்காத அழுகை
பின்னர் அங்குள்ள ஒரு புதருக்குள் குட்டியின் உடலை மறைத்து வைத்தது. மீண்டும் சாலைக்கு வந்து இங்கும் அங்குமாய் ஓடியது. தாய் குரங்கின் இந்த செயலை கண்ட வாகன ஓட்டிகள் கண் கலங்கி கிளம்பி சென்றனர். ஆனாலும் அந்த தாய் குரங்கின் அழுகை சத்தம் மட்டும் நீண்ட நேரத்திற்கு நிற்கவே இல்லை.