வீழ்ந்த கொள்ளிடம் பாலம்.. நல்லவேளை.. ஜெயலலிதா கட்டிய புதிய பாலம் கை கொடுத்தது!
Recommended Video
திருச்சி: ஆங்கிலேயர் கட்டிய கொள்ளிடம் இரும்பு பாலம் இரண்டாக உடைந்த போதிலும் பெரும் உயிரிழப்பை தவிர்த்தது ஜெயலலிதா கட்டிய புதிய பாலம்.
கர்நாடகம் மற்றும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனத்த மழை பெய்ததால் அங்குள்ள நீர் நிலைகள் மற்றும் அணைகள் நிரம்பி வழிந்தன. இதனால் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
இதையடுத்து காவிரி பாயும் ஆறுகள் ,அணைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
தூண் சேதம்
இந்நிலையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த இரும்பு பாலத்தின் 18, 21, 22 ஆகிய தூண்கள் சேதமடைந்தன. மேலும் தண்ணீரின் வேகம் மற்றும் அழுத்தத்தால் அந்த பாலம் நேற்று முன் தினம் நள்ளிரவில் பாதியாக உடைந்தது.
1924-இல் கட்டப்பட்டது
இந்த பாலம் ஆங்கிலேயர் ஆட்சியில் கடந்த 1924-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட முதல் பாலம் இதுவாகும். இந்த பாலத்தின் வழியாக சென்னை, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மக்கள் சென்று வந்தனர். சுமார் 93 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த பாலத்தின் உபயோகிக்கும் காலம் காலாவதியாகிவிட்டது.
போக்குவரத்து நிறுத்தம்
இதையடுத்து கடந்த 2014-ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சி காலத்தில் பழைய பாலத்துக்கு பக்கத்தில் புதிய பாலத்தை கட்டி பயன்பாட்டுக்கு விடப்பட்டது. இந்நிலையில் பழைய பாலத்தில் கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதில் வெறும் பாதசாரிகளுக்கும் சைக்கிள் மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகள் மட்டுமே பயணம் மேற்கொண்டனர்.
உயிரிழப்பை தவிர்த்த பாலம்
ஜெயலலிதா ஆட்சி காலத்தில் புதிய பாலம் மட்டும் கட்டப்படாமல் இருந்திருந்தால் பழைய பாலம் உடைந்த போது பெருத்த உயிரிழப்பை சந்திக்க நேர்ந்திருக்கும். நள்ளிரவு நேரமாக இருந்தாலும் தென் மாவட்டங்களுக்கு செல்ல திருச்சி வழியாகவும் செல்லலாம் என்பதால் பாலம் கனரக போக்குவரத்து பயன்பாட்டில் இருந்திருந்தால் பெரும் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.