இளையராஜாவை இழிவுபடுத்திய தலைப்பு... மன்னிப்பு கேட்டது நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்!
இசைஞானி இளையராஜா பத்மவிபூஷன் விருது பெற்ற செய்தியை தலித் அடையாளத்துடன் தலைப்பிட்டு பிரசுரித்த நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளது.
சென்னை : இசைஞானி இளையராஜாவிற்கு பத்ம விருது அறிவிக்கப்பட்டதை சாதியை சேர்த்து தலைப்பிட்டு செய்தி பிரசுரித்திருந்தது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ். இந்த செய்திக்கு கடுமையான கண்டனங்கள் எழுந்த நிலையில் இன்றைய நாளேட்டில் தங்களின் தவறுக்காக அந்த நாளிதழ் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளது.
இசைஞானி இளையராஜாவிற்கு கடந்த 25ம் தேதி பத்ம விபூஷன் விருதை மத்திய அரசு அறிவித்தது. இந்த விருது அறிவிக்கப்பட்டதற்கு இளையராஜா மகிழ்ச்சி தெரிவித்தார்.
தமிழக மீடியாக்களும் இளையராஜாவிற்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டதை, இசைக்குக் கிடைத்த சந்தோஷமாக கொண்டாடின. ஆனால் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் மட்டும் அதில் சாதியைக் கலந்து விட்டது. நேற்று வெளியிட்ட செய்தியில் இளையராஜாவிற்கு பத்ம விருது கொடுத்ததன் மூலமாக தலித்துகளை கவர்ந்து விட்டனர் என்று தலைப்பிட்டு செய்தியை பிரசுரித்திருந்தது.
இந்த தலைப்பிற்கு கடுமையான கண்டனங்கள் எழுந்தன. நடிகை கஸ்தூரி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழை காரி உமிழ்ந்து கிழித்தெறியும் காட்சி சமூக வலைதளத்தில் வைரலானது.
இந்நிலையில் சாதிப் பெயரை குறிப்பிட்டு இளையராஜாவின் பத்ம விருது செய்தியை பிரசுரித்திருந்ததற்கு தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் மன்னிப்பு கேட்டுள்ளது. இளையராஜாவின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் எந்த நோக்குடனும் இந்த செய்தி வெளியிடப்படவில்லை என்றும் தலைப்பில் தவறான அர்த்தத்தில் செய்தி பிரசுரிக்கப்பட்டதற்கு பகிரங்கமான மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக அந்த நாளிதழ் இன்று வெளியிட்டுள்ள செய்தித் தாளில் மன்னிப்பு கோரியுள்ளது.