பட்டாசு தொழிலுக்கு விதிக்கப்பட்ட புதிய விதிமுறைகளை நீக்க நடவடிக்கை: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
பட்டாசு தொழிலுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய விதிமுறைகளை நீக்க தமிழக அரசு மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.
சென்னை: பட்டாசு தொழிலுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய விதிமுறைகளை நீக்கம் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பட்டாசு உற்பத்தியில் உலக நாடுகளில் இந்தியா 2-ஆவது இடத்தில் உள்ளது. இந்திய நாட்டின் 90 சதவீத பட்டாசு தேவையை சிவகாசி பகுதியில் உற்பத்தியாகும் பட்டாசுகள் நிறைவேற்றுகின்றன. இந்த பட்டாசு தொழில் மூலம் சுமார் 5லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன் அடைந்து வருகின்றனர்.
தமிழக அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக பட்டாசு தொழில் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு வருகின்றது. பட்டாசு தொழிலுக்கும், பட்டாசு தொழிலாளர்களுக்கும் தமிழக அரசு, என்றும் உறுதுணையாக இருந்து வருகின்றது. சீனப் பட்டாசு இறக்குமதியால் சுமார் ஐந்து லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் அழியும் நிலை இருந்தது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்ட கடும் முயற்சியால் சீன பட்டாசு இந்தியாவில் விற்பனை செய்ய மத்திய அரசு தடை விதித்தது. பட்டாசு ஆலைகள் இயங்கும் அனைத்து பகுதிகளுக்கும் புதிய சாலையை தமிழக அரசு அமைத்து கொடுத்தது.
பட்டாசு விபத்தில் உயிரிழப்புகளை தவிர்க்கும் வகையில் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிறப்பு தீக்காய சிகிச்சை பிரிவை தமிழக அரசு செய்து கொடுத்தது. பட்டாசு தொழிலாளிகளின் பாதுகாப்பு நலன் கருதி ரூ.2.59 கோடி மதிப்பீட்டில் 5 ஏக்கர் இட வசதியுடன் பட்டாசு பயிற்சி மையம் அமைத்துக் கொடுத்துள்ளோம்.
புதிதாக பட்டாசு ஆலை துவங்க இருந்த தடை ஆணையை நீக்கி பட்டாசு தொழிலை பாதுகாத்தது அதிமுக அரசுதான். பட்டாசு கடைகள் நடத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல விதிமுறைகள் வகுக்கப்பட்டு அதன் பிறகே பட்டாசு கடைகளுக்கு உரிமம் வழங்கப்படுகின்றது.
உரிமம் கொடுக்கப்பட்ட பட்டாசு கடைகளில் பல்வேறு துறையினர் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனர். இதில் விதிமீறல் உள்ள பட்டாசு கடைகள் மீது அதிகாரிகள் நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர். இதில் ஒருசில பட்டாசு விபத்துகளை காரணம் காட்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவின் பேரில் ஐந்து புதிய விதிமுறைகள் மத்திய அரசு மூலம் வகுக்கப்பட்டுள்ளது. 5000 கிலோ பட்டாசு சேமிப்பு கிடங்கிற்கு 3 மீட்டர் பாதுகாப்பு தூரம் இருந்தால் போதும் என்ற விதிமுறையை மாற்றி தற்போது புதிய விதியில் 15 மீட்டர் தூரம் தேவை என்று விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிமுறை பட்டாசு தொழிலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்று பட்டாசு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்களின் கோரிக்கைகள் தமிழக முதலமைச்சர் மூலம் மத்திய அரசின் கவனத்திற்கு நான் கொண்டு சென்று புதிய விதிமுறைகளை நீக்கும் வகையில் நடவடிக்கையை எடுக்கப்படும்.
பட்டாசு தொழிலில் தற்போதுள்ள சூழ்நிலையில் பட்டாசு தொழிலை பாதுகாக்க அனைத்து வழிமுறைகளையும் தமிழக அரசு எடுத்து வருகின்றது. புதிய விதிமுறைகளை தவிர்க்கும் வகையில் பட்டாசு உரிமையாளர்கள், தொழிலாளர்களுக்கு நான் என்றும் உறுதுணையாக இருப்பேன். எந்த உதவிகளும் செய்யவும் நான் தயாராக உள்ளேன் என்று அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.