புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் இன்று பதவியேற்பு
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் 3 பேர் இன்று பதவியேற்க உள்ளனர்.
சென்னை: தஞ்சை, அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளில் இருந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் 3 பேர் இன்று பதவி ஏற்றுக் கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளில் பணம் பட்டுவாடா விவகாரம் தொடர்பாக சட்டமன்றத் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக எம்.எல்.ஏ. சீனிவேல் மரணம் அடைந்ததை தொடர்ந்து அங்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இந்த 3 தொகுதிக்கான சட்டசபைத் தேர்தல் நவம்பர் 19ம் தேதி நடைபெற்றது. இந்த 3 தொகுதியிலும் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. அரவக்குறிச்சியில் செந்தில் பாலாஜி, தஞ்சாவூரில் ரெங்கசாமி, திருப்பரங்குன்றத்தில் ஏ.கே.போஸ் ஆகிய மூன்று பேரும் வெற்றி பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற மூன்று பேரும் எம்.எல்.ஏ.க்களாக சபாநாயகர் அறையில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் விழாவில் பதவி ஏற்றுக் கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், பவி ஏற்பு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் இலாகாக்களை கவனிக்கும் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால் மற்றும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.