திருமணம் முடிந்த கையோடு ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட களத்திற்கு வந்த புதுமண தம்பதியர்
பனிமய மாதா தேவாலயத்தில் திருமணம் செய்து கொண்ட ஜோசப்-ஷைனி புதுமணத் தம்பதியர் இன்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றனர்.
தூத்துக்குடி: பனிமய மாதா தேவாலயத்தில் திருமணம் செய்து கொண்ட புதுமணத் தம்பதியினர் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்று பரபரப்பு ஏற்படுத்தினர்.
தூத்துக்குடி பனிமய மாதா தேவாலயத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு காத்திருப்பு போராட்டம் இன்று 2வது நாளாக தொடர்கிறது. ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பந்தலில் நூற்றுக்கணக்கானோர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டத்தில் இன்று பனிமய மாதா தேவாலயத்தில் திருமணம் செய்து கொண்ட ஜோசப்-ஷைனி புதுமணத் தம்பதியினரும் பங்கேற்றனர்.
தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, கடந்த 64 நாள்களாக அ.குமரெட்டியாபுரம் கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதைத் தொடர்ந்து சங்கரப்பேரி, மீளவிட்டான், தெற்கு வீரபாண்டியாபுரம், சில்வர்புரம், பண்டாரம்பட்டி உள்ளிட்ட 9 கிராம மக்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
வியாபாரிகள், வழக்கறிஞர்கள், மாணவர்கள், சமூக அமைப்புகள், லாரி ஓட்டுநர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் எனப் பல தரப்பினரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடி வருகின்றனர். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, தூத்துக்குடியில் பிரசித்திபெற்ற பனிமய அன்னைப் பேராலயம் முன்பாக நேற்று கறுப்புக்கொடி ஏற்றப்பட்டு, கறுப்பு பலூனும் பறக்கவிடப்பட்டது.
பனிமய அன்னை பேராலய வளாகத்துக்குள் பந்தல் அமைத்து, 2வது நாளாக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இன்று காலையில் திரு இருதய பேராலயத்தில், தூத்துக்குடியைச் சேர்ந்த ஜோசப் வாஸ் மற்றும் சைனி ஆகியோருக்கு திருமணம் நடைபெற்றது.
மீசைய முறுக்கு ஸ்டெர்லைட் ஆலையை நொறுக்கு என்ற வாசகம் எழுதப்பட்ட அட்டையை ஏந்தி, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக முழக்கமிட்டனர். தம்பதிகளுடன் திருமணத்துக்கு வந்தவர்களும் போராட்டத்தில் பங்கேற்றனர். இது ஜாதி, மதம் சாராத உயிர் வாழ்வதற்கான தூத்துக்குடி மக்களின் போராட்டம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.