வாக்கு எண்ணிக்கையின் போது பழுது ஏற்பட்டால், அடுத்து என்ன?- ராஜேஷ் லக்கானி தகவல்!
வாக்கு எண்ணிக்கையின் போது கட்டுப்பாட்டு எந்திரத்தில் பழுது ஏற்பட்டால் அச்சான சின்னங்கள் எண்ணப்படும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
சென்னை: வாக்கு எண்ணிக்கையின் போது கட்டுப்பாட்டு எந்திரத்தில் பழுது ஏற்பட்டால் அச்சான சின்னங்கள் எண்ணப்படும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
ஆர்கே நகர் தொகுதிக்கு ஓராண்டுக்குப் பின் நேற்று முன் தினம் தேர்தல் நடந்து முடிந்தது. இதில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 77.5 சதவீத வாக்குகள் பதிவானது.
வாக்குகளை எண்ணும் பணி நாளை நடைபெறுகிறது. வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ராணி மேரி கல்லூரியில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அமைதியாக நடந்தது
இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஆர்.கே.நகர் தேர்தல், எவ்வித அசம்பாவிதமும் இன்றி, அமைதியாக நடந்து முடிந்துள்ளது என்றார்.
அதிகபட்சமாக 90.19%
மொத்தம், 77.5 சதவீத ஓட்டுகள் பதிவாகின. தண்டையார்பேட்டை பட்டேல் நகரில் இருந்த, 19வது ஓட்டுச்சாவடியில், அதிகபட்சமாக, 90.19 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளன.
குறைந்தபட்சமாக...
குறைந்தபட்சமாக, புது வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள, 130வது ஓட்டுச் சாவடியில், 60.2 சதவீத ஓட்டுகளே பதிவாகின. கொருக்குப்பேட்டையில், இரவு, ஏழே முக்கால் வரை ஓட்டுப்பதிவு நடந்தது என்றும் ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.
பழுது ஏற்பட்டால்..
வாக்கு எண்ணிக்கைக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர், வாக்கு எண்ணிக்கையின் போது கட்டுப்பாட்டு எந்திரத்தில் பழுது ஏற்பட்டால் பழுது நீக்கும் இயந்திரத்தை வைத்து, சரி செய்வது வழக்கம் என்றார். ஆனால் இம்முறை அதற்கு பதிலாக துண்டு சீட்டில், அச்சான சின்னங்களை எண்ண, முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.