ஜெயலலிதா இறந்து 30 மணி நேரம் கழித்து அறிவித்தது ஏன்?.. மனோஜ் பாண்டியன்
ஜெயலலிதா, டிசம்பர் 4-ஆம் தேதியே இறந்துவிட்டபோதிலும், அவரது இறப்பு செய்தியை 30 மணி நேரம் கழித்து தாமதமாக அறிவித்தது ஏன்? என்று முன்னாள் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் கேட்டுள்ளார்.
சென்னை: உடல்நல பாதிப்பு காரணமாக அப்பல்லோவில் சிகிச்சை பெற்ற ஜெயலலிதா, டிசம்பர் 4-ஆம் தேதியே இறந்துவிட்டபோதிலும், அவரது இறப்பை உடனடியாக அறிவிக்காமல் 30 மணி நேரம் தாமதப்படுத்தியது ஏன் ? என்று முன்னாள் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை கிரீன் வேஸ் சாலையில் உள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வீட்டில் பி.எச். பாண்டியனும், அவரது மகன் மனோஜ் பாண்டியனும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும், அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போதே மோசமான நிலையில் இருந்ததாகவும் குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து மனோஜ் பாண்டியன் பேசுகையில், ஜெயலலிதா அவர்கள் டிசம்பர் 4-ம் தேதி 4.30 மணிக்கே இறந்துவிட்டார். ஆனால் 30 மணி நேரம் கழித்து அதாவது டிசம்பர் 5ம் தேதி 9.30 மணிக்கு அறிவித்தது ஏன்? அவருக்கு எம்பார்மிங் சிகிச்சை கொடுக்கப்பட்டது ஏன்? என்பது குறித்து அப்பல்லோ மருத்துவமனை விளக்க வேண்டும் என்றார் அவர்.