பழனி நவபாஷாண சிலை மாற்றம் செய்யப்படாது.. அறநிலையத்துறை சென்னை ஹைகோர்ட்டில் விளக்கம்
பழனி முருகன் கோயிலிலுள்ள நவபாஷாண சிலை மாற்றம் செய்யப்படாது என்று இந்து சமய அறநிலையத்துறை சென்னை ஹைகோர்ட்டில் விளக்கம் அளித்துள்ளது.
பழனி: பழனி முருகன் கோயிலிலுள்ள நவபாஷாண சிலை மாற்றம் செய்யப்படாது என்று இந்து சமய அறநிலையத்துறை சென்னை ஹைகோர்ட்டில் விளக்கம் அளித்துள்ளது.
பழனி தண்டாயுதபாணி முருகன் கோவிலில் நவபாஷாணத்தால் செய்யப்பட்ட மூலவர் சிலை உள்ளது. இந்த சிலைக்கு அபிஷேகம் செய்யும் போதும், அலங்காரம் செய்யும் போதும் சிறிய அளவில் சிலைகள் சேதம் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. இதனால் இந்த சிலையில் சேதம் ஏற்பட கூடாது என்று புதிய ஐம்பொன் சிலை செய்யப்பட்டது.
இந்த நிலையில் பழனி தண்டாயுதபாணி ஐம்பொன் சிலையை செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் எழுந்தது. சிலை செய்ததில் ரூ.1.31 கோடி முறைகேடு நடந்தது வெளிச்சத்திற்கு வந்தது. இதை பற்றிய வழக்கு தனியாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள் என்பவர் வேறு ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். அதன்படி நவபாஷாண சிலையை பரிசோதித்து பார்க்க குழு அமைக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்து இருந்தார். அதில் சேதம் இருக்கிறதா சென்று சோதிக்க வேண்டு என்று கோரிக்கை வைத்து இருந்தார்.
இதற்கு இந்து சமய அறநிலையத்துறை தற்போது விளக்கமும் அளித்துள்ளது. அதன்படி பழனி கோயிலிலுள்ள நவபாஷாண சிலை மாற்றம் செய்யப்படும் எண்ணம் இல்லை. அந்த சிலையில் எந்த விதமான பாதிப்பும் இதுவரை ஏற்படவில்லை. சிலை பாதுகாப்பாக இருக்கிறது என்று பதில் அளித்து இருந்தது.
இந்த நிலையில் நவபாஷாண சிலையை பரிசோதித்து பார்க்க குழு அமைக்க கோரிய வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. ஹைகோர்ட்டில் பழனி கோயில் நிர்வாகம் உறுதி அளித்ததை அடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.