ரசிகர்களுக்கே கொலை மிரட்டல் விடுத்த ரஜினி மன்ற நிர்வாகி சைதை ரவி... பரபர தகவல்கள்!
ரஜினி ரசிகர் மன்றத்திலிருந்து தாம் நீக்கப்பட்டது ஏன் என்பது குறித்து சைதை ரவி விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை: ரஜினியை சுற்றியிருக்கும் தவறான நபர்கள், காரணம் ஏதும் சொல்லாமல் என்னை மன்றத்திலிருந்து இருந்து நீக்கிவிட்டனர் என்று சைதை ரவி குற்றம்சாட்டியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் குறித்து பேச ஆரம்பித்த நாள் முதல் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின. இந்நிலையில் அரசியலுக்கு வருவதாக ரஜினி நேரடியாக சொல்லவில்லை என்றாலும் கூட நாம் தமிழர் கட்சியினர் தமிழர் முன்னேற்றப் படையினர், தமிழ் அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தின. நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மேற்கண்ட அமைப்புகளுக்கு எதிராக ரசிகர் மன்றத்தினர் ஆர்ப்பாட்டம் செய்து கட்சித் தலைவர்களின் படங்களை எரிக்க முயன்றனர். இதேபோல் ரஜினி ரசிகர் மன்றத்தினரும் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து மன்ற விதிகளை மீறும் ரசிகர் மன்றத்தினரை நீக்க நிர்வாகி சுதாகரனுக்கு அதிகாரம் உள்ளது என்று ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டார்.
ரசிகரை நீக்கிய சுதாகர்
இதைத் தொடர்ந்து சுதாகர் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த ரவி என்பவர் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும், தகுதியிலிருந்தும் நீக்கப்பட்டு விட்டார்.
தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது
அவருடன் வருங்காலத்தில் ரசிகர் மன்றத்தினர் எந்தவித தொடர்பையும் ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ரஜினி ரசிகர் மன்றத்தினர் ஊடகங்களுக்கு அனுமதியின்றி பேட்டியளிக்க கூடாது. அதேபோல் டிவி விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்கக் கூடாது என்று சுதாகர் உத்தரவிட்டுள்ளார்.
37 வருடமாக உழைத்தேன்
இதுகுறித்து சைதை ரவி தெரிவிக்கையில், 37 ஆண்டுகளாக ரசிகர் மன்றத்தில் இருந்து மன்ற பணிகளில் கலந்து கொண்டேன். இதன் மூலம் நான் சம்பாதித்தது இல்லை. ரஜினிக்காக உழைக்கும் என்னை என்ன காரணம் என்று கூட சொல்லாமல் நீக்கிவிட்டனர். ரஜினியை சுற்றியிருப்பவர்கள் தவறு செய்துவிட்டார்கள். மும்பையில் உள்ள ரஜினிக்கு கடிதம் எழுதுவேன். அவரிடம் நியாயம் கேட்பேன் என்றார்.
ரசிகர்களுக்கே கொலை மிரட்டல்
ரசிகர் மன்ற நிர்வாகி சுதாகர் தரப்பில் கூறுகையில், "கடந்த இரு ஆண்டுகளாக பட ரிலீஸ், டிக்கெட் புக் செய்வது, பேனர், போஸ்டர் ஒட்டுவது உள்ளிட்டவற்றில் பணம் வசூலித்து சைதை ரவி முறைகேடு செய்துள்ளார். சக ரசிகர்களுக்கே கொலை மிரட்டல் விடும் அளவுக்குப் போயுள்ளார். இதுகுறித்து போலீஸில் புகார் அளிக்க பல ரசிகர்கள் தயாராக இருந்தும், ரஜினியின் பெயருக்கு களங்கம் ஏற்படும் என்பதால் பொறுமையாக இருக்கச் சொன்னோம்.
ரஜினிக்குத் தெரியும்
ஆனால் ரசிகர்கள் கட்டுக் கோப்பாக நின்று ரஜினியைச் சந்தித்து வந்த நிலையில், இவர் அந்த ஏற்பாட்டையே குலைக்கும் வகையில் மண்டபத்துக்கு வந்து கலாட்டாவில் ஈடுபட்டார். மன்றத்திலிருந்து நீக்கும் நடவடிக்கையை சுதாகர் தன் இஷ்டப்படி எடுக்கவில்லை. தலைவருக்கு எல்லாமே தெரியும், அவரது அனுமதியுடன்தான் இந்த நீக்கம் நடந்தது" என்று தெரிவித்தனர்.