கோத்தகிரி தேயிலை தோட்டத்தில் திரியும் ஒற்றை கரடி.. கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை தீவிரம்
தேயிலை தோட்டங்களில் புகுந்து அட்டகாசம் கரடி ஒன்று அட்டகாசம் செய்து வருகிறது.
Recommended Video
கோத்தகிரி: கோத்தகிரி அருகே ஒற்றைக்கரடி ஒன்று தேயிலை தோட்டங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருவதால், அதனை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்துள்ளனர்.
நீலகிரி வடக்கு வனக்கோட்டத்திற்கு உட்பட்டது கோத்தகிரி கட்டபெட்டு வனச்சரகம். இங்குள்ள அரவேனு பெப்பன் பகுதியில் பசுமையான தேயிலை தோட்டங்கள் அடர்ந்து காணப்படும். இதனால் இங்கு ஏராளமானோர் தேயிலை பறிக்கும் பணிகளுக்கும் தேயிலை தொழிற்சாலைகளுக்கும் தினந்தோறும் சென்று வருவர். அதேபோல, கோத்தகிரியில் உள்ள பள்ளிகளுக்கு செல்ல பேருந்து வசதி இல்லாத காரணத்தினால் மாணவ, மாணவிகளும் இந்த பகுதியின் வழியாக நடந்து சென்று வருகின்றனர்.
இந்நிலையில் கரடி ஒன்றின் நடமாட்டம் பகல் நேரத்திலேயே இருப்பதாக அவர்கள் அறிந்தனர். இதனால் உடனடியாக வனத்துறையினருக்கு புகார் தெரிவித்தனர். அத்துடன் பொதுமக்களுக்கு அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படும் முன்னர் வனத்துறையினர் கிராமத்திற்குள் நுழைந்து அட்டகாசம் செய்யும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்றும், பிடிபட்ட கரடியை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.
அதனடிப்படையில் விரைந்து வந்த வனத்துறையினர் கரடியை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அதன் முதல்கட்ட நடவடிக்கையாக, கரடியை பிடிக்க கூண்டு வைத்து காத்து கொண்டுள்ளனர். நிமிடத்திற்கு நிமிடம் உயிரை கையில் பிடித்துக் கொண்டு கோத்தகிரி மக்கள், கரடி எப்போது பிடிபடுமோ என்று பதைபதைப்பிலும், கரடி பிடிபடுவதற்குள் பகுதி மக்களுக்கு எதுவும் நடந்துவிடக்கூடாதே என்ற அச்சத்திலும் உறைந்துள்ளனர். பீதியை கிளப்பி விட்டுள்ள ஒற்றைக்கரடியினால் கோத்தகிரி பகுதியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.