உயிரோடு இருக்கும் போது அம்மா.. இறந்தபின் ஜெயலலிதாவா? விட்டு விளாசிய ஹைகோர்ட் நீதிபதி
காலையில் மாலைப்போடுவதும், மாலையில் காலை வாரி விடுவதுமே தமிழகத்தின் தலைவிதியாகி விட்டதாக உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: ஜெயலலிதாவின் மகள் என்று உரிமைகோரும் அம்ருதாவின் வழக்கை விசாரித்த நீதிபதி இவ்வாறு தெரிவித்தார். ஜெயலலிதாவை அம்மா என்று அழைத்தவர்கள் அவரை தற்போது பெயர் கூறி அழைப்பதாகவும் அவர் விசாரணையில் குறிப்பிட்டார்.
பெங்களூருவை சேர்ந்த அம்ருதா என்பவர் தான் ஜெயலலிதாவின் மகள் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை உயர்நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இந்த வழக்கு சென்னை ஹைகோர்ட் நீதிபதி வைத்தியநாதன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
சோபன்பாபுவை தந்தை எனவில்லை
அம்ருதா, அவரின் உறவினர்கள் லலிதா மற்றும் ரஞ்சினி ஆகியோர் ஜெயலலிதாவின் உடலை பிராமண முறைப்படி தகனம் செய்ய வேண்டும் என்றும் தங்கள் மனுவில் கேட்டிருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ஜெயலலிதாவை தாய் என்றும் கூறும் அம்ருதா, சோபன்பாபுவை தந்தை என்று கூறாதது ஏன்? என்றார்.
அப்பல்லோவில் ரத்த மாதிரி இருக்கனுமே
ஜெயலலிதாவின் வாரிசு விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மரபணு சோதனை நடத்துவதற்கு ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள் அப்போல்லோவில் உள்ளனவா? என்றும் கேள்வி எழுப்பினார்.
ஆறுகோடி பேரும் வந்தால்
மேலும் ஜோசப் என்பவரும் இந்த வழக்கில் தன்னை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று நீதிபதியிடம் இந்த வழக்கின் விசாரணையின் போது மனு அளித்தார். இதனால் எரிச்சலடைந்த நீதிபதி, ஜெயலலிதாவின் வாரிசு என்று தமிழகத்தில் உள்ள ஆறு கோடி பேர் வந்தால், நீதிமன்றத்தை மெரினா கடற்கரைக்கு தான் மாற்ற வேண்டி வரும் என்றார்.
அம்மா சொன்னார்கள்
உயிருடன் இருக்கும் போது அம்மா என்று அழைத்தவர்கள் எல்லாம் தற்போது ஜெயலலிதாவை பெயர் சொல்லி அழைகின்றனர். காலையில் மாலைப்போடுவதும் மாலையில் காலை வாரி விடுவதுமே தமிழகத்தின் தலைவிதியாகி விட்டதாகவும் நீதிபதி வைத்தியநாதன் கூறினார். இவ்விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டு தலைமை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார்.