அரசியல்வாதிகளுக்காக பெண் சடலம் மீது அமர்ந்து பூஜை.... பெரம்பலூர் மந்திரவாதி மீது பாய்ந்தது குண்டாஸ்
கல்லூரி மாணவியின் சடலத்தை வைத்து பூஜை நடத்திய மந்திரவாதி கார்த்திகேயன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.
பெரம்பலூர்: பெரம்பலூரில் கல்லூரி மாணவியின் சடலத்தை வைத்து பூஜை செய்த மந்திரவாதி கார்த்திகேயன் என்பவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெரம்பலூர் எம்எம் நகரில் மந்திரவாதி கார்த்திகேயன்,32 வீட்டில் கடந்த 10ம் தேதி, அழுகிய நிலையில் பெண் சடலம், மனித மண்டை ஓடுகள், கடல் குதிரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆவிகளுடன் பேசவும், தனது மாந்திரீக சக்தியை அதிகரிக்கவும், சடலத்தின் மீது நள்ளிரவில் அமர்ந்து கார்த்திகேயன் பூஜை செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து மந்திரவாதி கார்த்திகேயன், மனைவி நசீமா,28 ஆகியோரை சமீபத்தில் போலீசார் கைது செய்தனர். பெண்ணின் சடலம் சென்னையைச் சேர்ந்த மாணவி அபிராமி உடல் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து மயிலாப்பூரில் மயானத்தில் புதைக்கப்பட்ட அபிராமி உடலை தோண்டி எடுத்து விற்ற மயான ஊழியர்கள் தன்ராஜ், கார்த்திக் மற்றும் உடலை எடுத்து வந்து கார்த்திகேயனிடம் கொடுத்த அவரது நண்பர்கள் வினோத்குமார், சதீஷ் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.
மந்திரவாதி கார்த்திகேயன் குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பெண் சடலத்தின் மீது அமர்ந்து 40 நாட்கள் பூஜை செய்தாராம் கார்த்திக்கேயன். ஆளும்கட்சி எம்எல்ஏவை அமைச்சராக்குவதற்காகவே இந்த பூஜையை ஸ்பெஷலாக செய்தாராம் கார்த்திக்கேயன். மயானத்தில் இருந்து சடலங்களை கடத்துவதற்காகவே மயான ஊழியர்களை வளைத்துள்ளார் கார்த்திக்கேயன்.
வாடகைக்கு குடியிருந்த வீட்டில் அகோர காளி பூஜை நடத்திய கார்த்திக்கேயனுக்கு வட இந்திய நடிகைகள், அரசியல்வாதிகளின் தொடர்பும் உண்டாம். அவர்களையும் சடலத்தின் மீது அமரவைத்து பூஜை செய்துள்ளானாம். பல நிர்வாண பூஜை சிடிக்களையும் கைப்பற்றியுள்ளனர் போலீசார்.
ஏற்கனவே கடந்தாண்டு ஆலத்தூர் அருகே உள்ள மருதடி மலையடிவாரத்தில் குடில் அமைத்து, மண்டை ஓடுகளுடன் மாந்திரீகம் செய்ததாக கார்த்திகேயன் கைது செய்யப்பட்டுள்ளார். இதனிடையே மந்திரவாதி கார்த்திகேயன் ஜாமினில் வெளியே வந்தால், மீண்டும் மோசடியில் ஈடுபடக்கூடும் என்பதால், அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, போலீசார் முடிவு செய்தனர்.
அதற்கான ஆவணங்கள் தயாரித்து மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் மாவட்ட கலெக்டர் நந்தகுமார் பரிந்துரையின் பேரில் மந்திரவாதி கார்த்திகேயனை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர். இதனால் இன்னும் ஒரு ஆண்டுக்கு கார்த்திகேயனால் ஜாமீனில் கூட வெளியே வர முடியாது.