கருணாஸ் கைது.. விசாரணையை துவக்கினர் நுங்கம்பாக்கம் போலீசார்
எம்எல்ஏ கருணாஸை போலீசார் இன்று கைது செய்தனர்.
Recommended Video
சென்னை: கைது செய்யப்பட்ட கருணாஸிடம் நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடிகரும் எம்எல்ஏவுமான நடிகர் கருணாஸ் காவல்துறையினரை மிரட்டும் வகையில் பேசியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
கருணாஸ் விளக்கம்
இதனால் அவர் மீது 8 பிரிவுகளில் நுங்கம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கருணாஸை கைது செய்ய 3 தனிப்படையும் அமைத்தனர். கருணாஸ் தலைமறைவு என்றுகூட தகவல்கள் பரவின. ஆனால் செய்தியாளர்கள் முன்பு கருணாஸ் பேசி தான் எங்கும் ஓடவில்லை என விளக்கம் அளித்திருந்தார்.
உரிய நடவடிக்கை
இதனிடையே, கருணாசின் பேச்சு, முதலமைச்சரின் கவனத்திற்கு சென்றிருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்திருந்தார். மேலும், சட்டத்தை மீறி யார் பேசினாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியும் அளித்திருந்தார்.
அரசியல் நாகரீகம்
நேற்றிரவு செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், பொது இடங்களில் அரசியல் நாகரீகம் அவசியம் என்றும், சட்டம்தன் கடமையை செய்யும் என்றும் கருணாஸ் பேசியது குறித்து கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று காலை சாலிகி ராமத்தில் உள்ள அவர் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.
நாளை கோர்ட்டில் ஆஜர்?
நுங்கம்பாக்கம் உதவி ஆணையர் முத்துவேல் பாண்டியன் தலைமையில் போலீசார் கருணாஸை கைது செய்தனர். அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்டகருணாஸ் நுங்கம்பாக்கம் காவல்நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரிடம் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். விசாரணைக்கு பின் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.