மின்சாரம் தாக்கி உயிரிழந்த குரங்கு.. ஊர்வலமாக கொண்டு சென்று அடக்கம் செய்த காவலர்!
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த குரங்கை தலைமை காவலர் ஒருவர், ஊர்வலமாக கொண்டு சென்று, பூமாலை அணிவித்தும், சிகப்பு, குங்குமம் தூவி பால் ஊற்றி அடக்கம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே பகண்டை கூட்டு சாலையில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகில், மின்சாரம் தாக்கி குரங்கு ஒன்று இறந்து கிடந்தது.
இதனை அவ்வழியாக சென்ற பலரும் பார்த்துவிட்டு, கண்டுகொள்ளாமல் சென்ற நிலையில், பகண்டை கூட்டு சாலை காவல் நிலையத்தின் முதன்மை காவலராக பணிபுரிந்து வரும் தாமோதரன், குரங்கு இறந்து கிடப்பதை பார்த்ததும், உடனடியாக சாக்குப்பையில் இறந்த குரங்கை வைத்து, ஊர்வலமாக வண்டியில் எடுத்து சென்று, அருகிலுள்ள ஏரியில் குழிதோண்டி அடக்கம் செய்தார்.
நிர்பயா கொலை வழக்கு குற்றவாளி முகேஷின் கருணை மனுவை நிராகரித்தார் ஜனாதிபதி
மேலும் குரங்குக்கு பூமாலை அணிவித்தும், சிகப்பு, குங்குமம் தூவி பால் ஊற்றி அடக்கம் செய்து மரியாதை செலுத்தினார். காவலர் தாமோதரனின் இச்செயலுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
மனிதர்களை மனிதர்களே நேசிக்க மறந்துள்ள இக்காலத்தில், இறந்த வாய் இல்லா ஜீவனை, அதுவும் ஓர் உயிர்தான் என கருதி அவற்றை அடக்கும் செய்துள்ள காவலர் தாமோதரனின் செயல் பாராட்டுகுரியதே.