மானியம் இல்லா சமையல் எரிவாயு விலை இன்று முதல் அதிகரிப்பு.. 5வது மாதமாக விலைவாசி ஏறுமுகம்
சென்னை: மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஜனவரி 1ம் தேதியான இன்று முதல், அதிகரித்துள்ளது. இதன் மூலம் தொடர்ச்சியாக ஐந்தாவது மாதமாக எரிவாயுவின் விலை அதிகரிப்பை சந்தித்துள்ளது.
கொல்கத்தா நகரில் ஒரு சிலிண்டரின் விலை ரூபாய் 21.5 என்ற அளவுக்கு அதிகரித்து 747 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சென்னையில் ஒரு சிலிண்டரின் விலை 20 ரூபாய் அதிகரித்து 734 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
டெல்லி மற்றும் மும்பையில், இந்த உயர்வு முறையே சிலிண்டருக்கு ரூ .19 மற்றும் ரூ .19.5 ஆக உயர்ந்துள்ளது என்று இண்டேன் பிராண்டின் கீழ் எல்பிஜி வழங்கும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது. ஜனவரி 1 முதல், மானியமில்லாத எல்பிஜி காஸ் சிலிண்ர் டெல்லியில், சிலிண்டருக்கு ரூ .714 ஆகவும், மும்பையில் சிலிண்டருக்கு ரூ .684.50 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதுதவிர மானிய விலையில் ஒரு குடும்பத்திற்கு ஆண்டுதோறும் 12 சிலிண்டர்கள் வழங்கப்படுகின்றன. இதன் எடை 14.2 கிலோ கிராம். அந்த அளவைத் தாண்டி சமையல் எரிவாயு தேவைப்பட்டால் சந்தை விலையில் அவர்கள் பணம் கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
3 நாட்களில் நடந்த 3 விஷயம்.. புது வருடத்தில் புது பிளான் போடும் பாமக.. அதிர்ச்சியில் அதிமுக கூட்டணி!
ஜனவரி 1ம் தேதியான இன்று முதல் ரயில் கட்டணங்களும் அதிகரிப்புக்கு உள்ளாகியுள்ளன. ஏசி பெட்டிகளுக்கு ஒரு கிலோமீட்டருக்கு நாலு பைசா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏசி வசதியற்ற ரயில்பெட்டிகளுக்கான கட்டணம் ஒரு கிலோமீட்டருக்கு ஒரு பைசா அளவுக்கு அதிகரிப்புக்கு உள்ளாகியுள்ளது.
சில்லறை சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை கிலோவுக்கு ரூ.120, சின்ன வெங்காயத்தின் விலை கிலோ 200 ரூபாய் என்ற அளவில் விற்பனையாகி வருகிறது. இவ்வாறு அனைத்து நுகர்வுப் பொருட்களின் விலையும் கடந்த சில மாதங்களில் சரமாரியாக உயர்வைக் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.